மும்பை: பஞ்சாப் அணியின் இளம் வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா ஆகியோருக்கு கிரிக்கெட் ஜாம்பவானான யுவராஜ் சிங் ஆலோசகராக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் யுவராஜ் சிங்கிடம் பயிற்சி பெற்று வந்த நிலையில், தற்போது இவர்களும் இணைந்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்திய டி20 அணியின் தொடக்க வீரர்களாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவருமே யுவராஜ் சிங்கின் சிஷ்யர்கள். இந்திய அணிக்கு வருவதற்கு முன்பாகவே யுவராஜ் சிங்கின் பட்டறையில் இருவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டவர்கள். சுப்மன் கில்லின் தொடக்க காலத்தில் யுவராஜ் சிங் செய்த உதவிகள், பயிற்சிகள் தொடர்பாக ஏராளமான முறை பேசியுள்ளார்.

அதேபோல் அபிஷேக் சர்மாவும் யுவராஜ் சிங்கால் வளர்த்தெடுக்கப்பட்டவர் என்றே சொல்லலாம். ஒவ்வொரு முறை அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடும் போதும், யுவராஜ் சிங் தவறாமல் பாராட்டி வருகிறார். அதேபோல் அபிஷேக் சர்மா செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் யுவராஜ் சிங் தனியாக அகாடமி பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் அகாடமியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்துள்ளனர். டெல்லிய்டைச் சேர்ந்த பிரியன்ஷ் ஆர்யா ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி 475 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் டிபிஎல் தொடரில் 8 இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்தார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் பிரப்சிம்ரன் சிங் 14 இன்னிங்ஸில் விளையாடி 549 ரன்களை குவித்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் யுவராஜ் சிங்கிடம் பயிற்சி மேற்ண்டு வருவது தெரிய வந்துள்ளது. இவர்களின் ஆலோசகராக யுவராஜ் சிங் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணியில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.