சென்னை: ஐபிஎல் தொடரின் முதல் 8 சீசன்களில் 6 முறை ஃபேர்பிளே விருதை வென்றுள்ள சிஎஸ்கே, அம்பாதி ராயுடு வந்த பின் கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஃபேர்பிளே விருதை வெல்லாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சென்னை அணியின் நட்சத்திர வீரர் அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் ராயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அம்பாதி ராயுடு களத்தில் ஆக்ரோஷமான வீரராகவே செயல்படுவார். நடுவரின் முடிவை ஏற்காமல் அதிகளவில் முரண்படும் வீரராகவே அறியப்படுகிறார்.

அம்பாதி ராயுடு குறித்து தோனி பேசுகையில், அம்பாதி ராயுடுவை பற்றி நினைக்கும் போது இரண்டு விஷயங்களை சொல்ல வேண்டும். முதல் விஷயம், ராயுடு களத்தில் இருந்தால் 100% வெற்றிக்காக போராடக் கூடிய வீரர். இன்னொரு விஷயம் என்னவென்றால், ராயுடு இருந்தால் என்னால் ஃபேர்பிளே விருதை வெல்ல முடியாது என்று தெரிவித்தார்.
சிஎஸ்கே கேப்டன் தோனி பேசியதை போலவே, நடப்பு ஆண்டுக்கான ஃபேர்பிளே விருது டெல்லி அணிக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 சீசன்களில் விளையாடியுள்ளது. அதில் முதல் 8 சீசன்களில் சென்னை அணி 6 முறை ஃபேர்பிளே விருதை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடைக்கு பின் 2018ஆம் ஆண்டு சென்னை அணி மீண்டும் கம்பேக் கொடுத்தது. அப்போதுதான் அம்பாதி ராயுடுவும் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அம்பாதி ராயுடு சென்னை அணிக்காக விளையாடிய 6 சீசன்களில் ஒருமுறை கூட சிஎஸ்கே அணி ஃபேர்பிளே விருதை வென்றதில்லை. இதனால் தோனி சொல்வது சரிதான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2019ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக அம்பாதி ராயுடு தேர்வு செய்யப்படாத போது, விஜய் சங்கரை வம்புக்கு இழுக்கும் வகையில், ஆட்டத்தை பார்க்க 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளேன் என்று ட்விட்டரில் பதிவிட்டவர் அம்பாதி ராயுடு. அதுமட்டுமல்லாமல் உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
