மும்பை: இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில், அவரின் சொத்து மதிப்பு உச்சத்திற்கு சென்றிருக்கிறது. ஐபிஎல் வருமானம், பிசிசிஐ ஊதியம் ஒரு பக்கம் இருக்க, அதனைவிட விளம்பர வருவாய் மூலமாக சுப்மன் கில் கோடிகளில் ஈட்டி வருவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், பும்ராவுக்கு கேப்டன்சியை கொடுத்து சுப்மன் கில்லை அவருக்கு கீழ் தயார் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாகவே சுப்மன் கில் கைகளில் கேப்டன்சியை ஒப்படைத்தனர். அதற்கேற்ப வெளிநாடுகளில் ஒரு டெஸ்ட் சதம் கூட அடிக்காமல் சுப்மன் கில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட புறப்பட்டார். ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் உட்பட 4 சதங்களை விளாசியதோடு, கணக்கு வைத்து கொள்ள முடியாத அளவிற்கு சாதனைகளை முறியடித்தார்.
அதேபோல் என்ன நடந்தாலும் போராடுவோம் என்ற துணிச்சலுடன் சுப்மன் கில் கேப்டன்சியை மேற்கொண்டது ரசிகர்களுக்கும் நம்பிக்கையை அளித்தது. அதேபோல் சுப்மன் கில்லின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், விளம்பர நிறுவனங்களுக்கும் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. ஏனென்றால் சுப்மன் கில்லை தங்களின் ஒப்பந்தத் தூதராக நியமிக்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
ஏற்கனவே பிசிசிஐ ஊதியம் மூலமாக ஆண்டுக்கு ரூ.7 கோடியும், ஐபிஎல் ஒப்பந்தம் மூலமாக ஆண்டுக்கு ரூ.16.5 கோடியும் சுப்மன் கில் பெற்று வருகிறார். எம்ஆர்எஃப் நிறுவனம், கில்லட் நிறுவனம், சியர் நிறுவன, மை லெவன் சர்கிள், டாட்டா கேபிட்டல், பாரத் பே உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
தற்போது நைக், ஜேபிஎல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் சுப்மன் கில்லை தேடி வரத் தொடங்கி இருக்கின்றன. இதனால் சுப்மன் கில்லின் மதிப்பு எக்குத்தப்பாய் எகிறி இருக்கிறது. முதலில் விளம்பர ஒப்பந்தங்களை ரூ.1 கோடி வரை செய்து வந்த சுப்மன் கில், தற்போது ரூ.5 கோடிதான் தொடக்க மதிப்பாக நிர்ணயித்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் மேலாளர்களை அழைக்கவும் திட்டமிட்டு வருகிறார். ஏனென்றால் கிரிக்கெட் வீரர்களின் மேலாளர்கள் தான் நிறுவனங்களிடம் ஊதியம் குறித்து பேசுவார்கள். 21 வயது சுப்மன் கில்லுக்கு அவரின் தந்தை மேலாளராக இருந்து வந்த சூழலில், அதன்பின் 3 மேலாளர்களை மாற்றி இருக்கிறார். தற்போது செபஸ்டியன் ஷாகி என்பவரை மேலாளராக நியமித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக ரூ.34 கோடியாக இருந்த சுப்மன் கில்லின் ஆண்டு வருமானம், தற்போது ரூ.50 கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் சுப்மன் கில் விளம்பரத் துறையிலும் வருமானம் ஈட்டி வருவது அதிகரித்துள்ளது. இதனால் சுப்மன் கில் விளம்பர உலகில் அடுத்த விராட் கோலியாக உருவாகுவார் என்று கருதப்படுகிறது.