மார்ச் 6ல் நிறைவு
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையில் சர்வதேச டி20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்கள் நிறைவுற்றுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரை முடித்துக்கொண்டு வரும் 6ம் தேதி இந்திய அணி நாடு திரும்புகிறது.
தென்னாப்பிரிக்காவுடன் மோதல்
இதையடுத்து வரும் 12ம் தேதி துவங்கி 18ம் தேதி நிறைவடையவுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இந்தியா மோதவுள்ளது. இதற்கென முதல் போட்டி நடைபெறவுள்ள தர்மசாலாவிற்கு வரும் 10ம் தேதி இந்திய அணி செல்லவுள்ளது. இதற்கு இடையில், ஐபிஎல்லை முன்னிட்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பணிச்சுமை கண்காணிப்பு போன்றவையும் வீரர்களுக்கு நடத்தப்பட உள்ளன.
விராட் கோலி குற்றச்சாட்டு
முன்னதாக நியூசிலாந்து தொடரின்போது செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, அடுத்தடுத்த போட்டிகள், ஓய்வில்லாத பயிற்சிகள் உள்ளிட்டவை தங்களது ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தார். உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு
இதனிடையே வங்கதேச தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த தினத்தை கொண்டாடும்வகையில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கிடையிலான இரண்டு டி20 போட்டிகளை கொண்ட தொடரை வரும் மார்ச் 21 மற்றும் 22 தேதிகளில் திட்டமிட்டுள்ளது. இதற்கென இந்திய வீரர்கள் 10 பேருக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. ஒரு போட்டியிலாவது விராட் கோலி விளையாட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளது.
பிசிசிஐ திட்டவட்டம்
இதனிடையே 10 வீரர்களுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஆனால் 5 வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் அதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் வீரர்களின் பணிச்சுமை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
ரவி சாஸ்திரி கருத்து
தென்னாப்பிரிக்காவுடன் 6 நாட்களில் 3 போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி, தொடர்ந்து அடுத்த இரு தினங்களில் டாக்காவின் இந்த தொடரில் பங்கேற்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அது வீரர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கோலி உணர்ந்தால் அதை நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சுட்டிக் காட்டிய பிசிசிஐ அதிகாரிகள்
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை கேப்டன் விராட் கோலி ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் அதிக நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சர்வதேச டி20 தொடர்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.