லண்டன்: 3 டி பிளேயர் என்ற அம்பத்தி ராயுடுவின் விமர்சனத்துக்கு விஜய் சங்கர் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
உலக கோப்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு இடம்பெற வில்லை. அவருக்கு பதிலாக, விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் கோபமடைந்த ராயுடு, விஜய் சங்கர் குறித்து 3டி கிளாஸ் என்று கூறி டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

அவரது இந்த விமர்சனம் பெரும் புயலை கிளப்பியது. பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந் நிலையில் நீண்ட நாட்கள் கழித்து அவரது விமர்சனத்துக்கு விஜய் சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து விஜய் சங்கர் கூறியிருப்பதாவது: ஒரு வீரர் பெரிதும் எதிர்பார்த்திருந்த அணியில் தேர்வு பெறவில்லை என்றால் அவரது மனது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்று எனக்கு தெரியும்.
நானும் அதனை உணர்ந்திருக்கிறேன். ராயுடு என்னை மனதில் வைத்து கொண்டு அப்படி சொல்லி இருக்கமாட்டார். என் மீது அப்படி ஒரு விமர்சனம் வைத்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
நான் இந்திய அணிக்காக விளையாடுகிறேன். அதற்காக முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு, முழு திறனுடன் விளையாட வேண்டும். அதில் நான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அதில் இருந்து எனது கவனம் சிதறாது என்றார்.