மும்பை: உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். அதேபோல் நேற்று மாலை அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்தது. அதில் இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் இன்று முதல் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதில் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து ஆடி வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினின் ரோல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அந்த நிலையில் வழக்கம் போல் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் களமிறங்குவார்கள் என்பது உறுதியான ஒன்று.
அதேபோல் 3வது இடத்தில் விராட் கோலி, 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், 5வது இடத்தில் கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் 6வது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 7வது இடத்தில் ஜடேஜா, 8வது இடத்தில் அஸ்வின், 9வது குல்தீப் யாதவ், 10வது இடத்தில் பும்ரா, 11வது இடத்தில் சிராஜ் ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
இதில் 8வது இடத்தில் அஸ்வின் மட்டும் ஆடுகளத்திற்கு ஏற்றபடி மாற்றப்படுவார் என்று பார்க்கப்படுகிறது. சென்னை, டெல்லி, லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட மைதானங்களில் அஸ்வின் விளையாட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மற்ற நேரங்களில் ஷர்துல் தாக்கூர் அவரது இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.