கொரோனா உறுதி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் இங்கிலாந்து தொடரை வென்று விடும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்று காலை அதிர்ச்சி செய்தி கிடைத்தது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட்-க்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும், அவர் கடந்த 8 நாட்களாக குவாரண்டைனில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் தயாநந்த்-க்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் ஒரு வீரர்
இந்நிலையில் இந்திய அணியின் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருதிமான் சாஹாவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சாஹாவுக்கும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கும் முதலில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்துள்ளது. எனினும் இருவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2ம் கட்ட பரிசோதனைகாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆப்பு வைத்த கொரோனா
இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் விக்கெட் கீப்பரின் இடத்திற்கு ரிஷப் பண்ட் தான் முதல் தேர்வாக இருந்தார். அவருக்கு கொரோனா உறுதியானதால் அடுத்தப்படியாக விருதிமான் சாஹா இருந்தார். தற்போது அவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு முதல் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சாஹாவுக்கு இங்கிலாந்து தொடர்தான் நம்பிக்கை கொடுத்தது. தற்போது அதற்கு ஆப்பு வைத்துள்ளது கொரோனா.
நற்செய்தி
பண்ட் மற்றும் சாஹா ஆகிய இருவரும் ஒருவேளை அடுத்த 10 நாட்களுக்குள் குவாரண்டனை விட்டு வெளியே வராமல் இருந்தால் அது கே.எல்.ராகுலுக்கு நற்செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தொடரில் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் கே.எல்.ராகுல். தற்போது அணியில் இருந்த விக்கெட் கீப்பர்கள் இருவருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால், விக்கெட் கீப்பிங் இடத்திற்கு எப்படியும் ராகுலின் பெயர் தான் பரிந்துரைக்கப்படும்.