கொரோனா
இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் தயாராகி வரும் நிலையில் இன்று காலை அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்தது. இந்திய அணியில் 2 பேருக்கு கொரோனா உறுதியானதாக அறிவிப்பு வெளியானது. அதில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ஒருவர் என தெரியவந்தது. அவர் கடந்த 8 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் மற்றொரு நபரின் தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
யார் அந்த 2வது நபர்
இந்நிலையில் கொரோனா உறுதியான 2வது நபர் யார் என்பது தெரியவந்துள்ளது. அணியின் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் தயாநந்த் காரானிக்கு தான் கொரோனா உறுதியானதாக தகவல் கசிந்துள்ளது. அவருக்கும் டெல்டா ப்ளஸ் கொரோனா வகைதான் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும்
இதுமட்டுமல்லாமல் அணியில் மேலும் 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாஹா ஆகியோருக்கு முதலில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவுகள் வந்தாலும், அவர்களின் உடல்நிலை வழக்கத்திற்கு மாறாக உள்ளதாக தெரிகிறது. எனவே அவர்கள் தீவிர கண்காணிப்புடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பயிற்சி போட்டி
இங்கிலாந்தில் குடும்பத்தினருடன் ஜாலியாக சுற்றி வந்த இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது துர்ஹாம் நகரத்தில் ஒன்றிணைந்து வருகின்றனர். அவர்கள் ஜூலை 20ம் தேதி முதல் இங்கிலாந்தின் கவுண்டி அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 4 பேரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனக்கூறப்படுகிறது.