டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சதம் விளாசி அசத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காத வாஷிங்டன் சுந்தர், நம்பர் 3ல் களமிறங்கி சதம் விளாசி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதை எட்டியுள்ள நிலையில், அவர் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்து விளையாட முடியும். ஆஃப் ஸ்பின்னர் மற்றும் டவுன் தி ஆர்டர் பேட்ஸ்மேன் என்று இரு வகையான ரோல்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செய்து வருகிறார். இதனால் அவருக்கான மாற்று வீரரை கண்டறிய வேண்டிய தேவை பிசிசிஐ-க்கு உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி நிர்வாகம் தயார்படுத்தி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சில போட்டிகளை விளையாடி இருந்தாலும், இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை தயார் செய்யும் வகையில் துலீப் டிராபியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின் நேரடியாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட வாஷிங்டன் சுந்தர் அறிவுறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி, முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 379 ரன்களை குவித்திருந்தது. தொடக்க வீரர் சாய் சுதர்சன் 202 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களுடன் தான் களத்தில் இருந்தனர். இதனால் வாஷிங்டன் சுந்தர் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 2வது நாளின் முதல் சில ஓவர்களிலேயே வாஷிங்டன் சுந்தர் தனது சதத்தை எட்டினார். வழக்கமாக டவுன் தி ஆர்டரில் பேட்டிங் செய்யக் கூடிய வாஷிங்டன் சுந்தர், இந்தப் போட்டியில் நம்பர் 3 வரிசையில் களமிறங்கி சதமடித்து அசத்தியுள்ளார். இதனால் விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.