கோவை: புச்சி பாபு தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட சர்ஃபராஸ் கான் உடல்நிலை பிரச்சனை காரணமாக களத்திற்கு வரவில்லை என்பதால், சூர்யகுமார் யாதவ் பொறுப்பை எடுத்து கொண்டுள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவின் அடுத்த இலக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதே என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் துலீப் டிராபி தொடருக்கு முன்பாக நடக்கும் புச்சி பாபு தொடரிலேயே சூர்யகுமார் யாதவ் கலந்து கொண்டுள்ளார்.

இது துலீப் டிராபி தொடருக்கான தயாரிப்பு பணியாக சூர்யகுமார் யாதவிற்கு அமைந்துள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஒருநாள் போட்டிகளில் கூட சூர்யகுமார் யாதவிற்கு இடம் அளிக்கப்படவில்லை. டி20 கிரிக்கெட்டில் மட்டுமே முழு கவனமும் செலுத்தி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டாலும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
இன்னும் 5 மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. ஐசிசி தொடரில் விளையாடும் நோக்கில் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான மந்திரத்தை அறிய முயற்சிப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூர் மைதானத்தில் தமிழ்நாடு vs மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து வருகிறது.
முதல் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 294 ரன்கள் குவித்திருந்த நிலையில், 2வது நாள் ஆட்டத்தில் 379 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. 2வது நாளில் தமிழக வீரர் அஜித் ராம் அரைசதம் விளாசி அசத்தினார். இதன்பின் களமிறங்கிய மும்பை அணிக்கு தமிழ்நாடு ஸ்பின்னர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்தனர். சாய் கிஷோர், அஜித் ராம் மற்றும் லக்ஷய் ஜெய்ன் ஆகிய 3 பேரும் இணைந்து அட்டாக்கில் மிரட்டினர்.
இதன் காரணமாக மும்பை அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தமிழக ஸ்பின்னர்களான சாய் கிஷோர் மற்றும் லக்ஷய் ஜெய்ன் தலா 3 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட சர்ஃபராஸ் கான் களத்திற்கே வராதது தெரிய வந்துள்ளது. சர்ஃபராஸ் கானுக்கு உடல்நிலை மோசமாகியதால், அவர் களம் வரவில்லை என்று கூறப்பட்டது. இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் 2வது நாளில் மும்பை அணியின் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்ட போது ஸ்பின்னரான ஹிமான்ஷு சிங்கை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். இதன் காரணமாக 294 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையில் இருந்த தமிழ்நாடு அணி, அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆல் அவுட்டாகியது குறிப்பிடத்தக்கது.