
டி20 உலகக்கோப்பை
2007இல் முதன்முறையாக டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தது. இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

கம்பீர் - சேவாக் அபாரம்
கம்பீர் - சேவாக் அபார ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தனர். இந்திய அணி 16.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் இழந்து இருந்தது. அப்போது தோனி - யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தனர். 18வது ஓவரில் யுவராஜ் சிங் இரண்டு பவுண்டரி அடித்தார்.

பிளின்டாப் கோபம்
அந்த ஓவரை வீசிய ஆண்ட்ரூ பிளின்டாப் கோபம் அடைந்தார். யுவராஜ் சிங்கை சீண்டினார். "உன் கழுத்தை வெட்டி விடுவேன்" என அவர் மிரட்டி இருக்கிறார். அதைக் கேட்ட உடன் கடும் கோபம் அடைந்தார் யுவராஜ் சிங். இனி வரும் பந்து எல்லாவற்றையும் சிக்ஸ் அடித்து வெளுக்க வேண்டும் என முடிவு செய்தார்.

அடுத்த ஓவரில் ஆறு சிக்ஸ்
துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஓவரை வீசினார் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு. அவர் வீசிய ஆறு பந்துகளையும் சிக்ஸ் அடித்து மிரட்டினார் யுவராஜ் சிங். அது இந்திய ரசிகர்களின் இதயத்தில் இன்று வரை மறக்க முடியாத ஓவராக உள்ளது.

பரிதாபம்
அந்த நேரத்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸ் அடித்ததற்காக கிரிக்கெட் உலகமே அவரை கொண்டாடி வந்தது. மறுபுறம், எந்த வம்பு தும்புக்கும் போகாமல், யாரோ சீண்டியதற்கு வாங்கிக் கட்டிக் கொண்ட ஸ்டூவர்ட் பிராடை நினைத்து அனைவரும் பரிதாபம் அடைந்தனர்.

ஸ்டூவர்ட் பிராடு நிலை
அந்த நேரத்தில் இனி ஸ்டூவர்ட் பிராடு இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படவே மாட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது. மறுநாள் ஸ்டூவர்ட் பிராடின் தந்தை கிறிஸ் பிராடு, யுவராஜ் சிங்கை சந்தித்தார். அவர் மேட்ச் ரெப்ரீயாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கையெழுத்து
கிறிஸ் பிராடு யுவராஜ் சிங்கை சந்தித்து, "என் மகனின் கிரிக்கெட் வாழ்வை கிட்டத்தட்ட முடித்து விட்டாய். இப்போது அவனுக்காக இந்த ஷர்ட்டில் கையெழுத்து போட்டுக் கொடு" என ஆட்டோ கிராப் கேட்டுள்ளார் கிறிஸ் பிராடு.

நெகிழ வைத்த கிறிஸ் பிராடு
தன் மகன் ஸ்டூவர்ட் பிராடு அந்த ஆறு சிக்ஸர்களால் மனமுடைந்து இருந்த நிலையிலும், யுவராஜ் சிங்கிடம் அவருக்காக ஆட்டோகிராப் கேட்டு நெகிழ வைத்தார் கிறிஸ் பிராடு. யுவராஜ் சிங் தன் இந்திய அணி ஜெர்ஸியை எடுத்து அவருக்காக ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.

மாஸ்கரனஸ் ஐந்து சிக்ஸர்கள்
அந்த ஆட்டோகிராப்பில் யுவராஜ் சிங் தான் சில நாட்களுக்கு முன் தன் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் மாஸ்கரனஸ் ஐந்து சிக்ஸர்கள் அடித்ததை குறிப்பிட்டு, "என் பந்துவீச்சிலும் ஐந்து சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. அது எப்படி வலிக்கும் என எனக்கு தெரியும் என எழுதி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications