தொடரை கைப்பற்றிய இந்தியா
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் சர்வதேச டி20, சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. நியூசிலாந்துடன் மோதிய முதல் சர்வதேச டி20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் வென்று இதுவரை எந்த நாடும் மேற்கொள்ளாத சாதனையை இந்தியா புரிந்துள்ளது.
உணர்ச்சி வசப்பட்ட ராஸ் டெய்லர்
இந்தியா நியூசிலாந்து இடையில் மவுண்ட் மாங்கானுய்யில் நேற்று நடைபெற்ற 5வது டி20 போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து பேசிய நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், டி20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது நியூசிலாந்து அணிக்கு வலியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலகதர வீரர்கள் பங்கேற்பு
சர்வதேச டி20 தொடரில் 5க்கு 0 என்ற கணக்கில் நியூசிலாந்து தோல்வியுற்ற நிலையில், அடுத்ததாக வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதிவரை நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெல்லும் முனைப்பில் உள்ளதாக ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் உலகதரமான நியூசிலாந்து வீரர்கள் அணியில் இணைய உள்ளதாகவும் அதனால் இந்த தொடரில் இந்தியாவிற்கு சவாலாக நியூசிலாந்து இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திறனை அதிகரிக்க வேண்டும்
இந்தியாவிற்கு அதிகமான சந்தர்ப்பங்களை நியூசிலாந்து அணி அளித்ததாகவும், அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்த ராஸ் டெய்லர், பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் உடனடியாக நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால் இதேபோல தோல்விகளையே எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் தெரிவித்தார்.
"டி20யிலும் சிறப்பாக எதிர்கொண்டோம்"
கடந்த ஆண்டில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியதை குறிப்பிட்ட ராஸ் டெய்லர், உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றி கொண்டதை சுட்டிக் காட்டினார். இந்தியா வலிமையான அணி என்றபோதிலும் அதேபோன்ற உறுதியுடன் இந்தியாவை டி20 தொடரிலும் எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நெருக்கடியை கொடுத்த பௌலர்கள்
உலகதர பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் நவ்தீப் சாய்னி உள்ளிட்டவர்களின் பந்துவீச்சு நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை தந்ததாகவும், அதேபோல தேவையற்ற நேரங்களில் விக்கெட் விழுந்ததும் அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும் ராஸ் டெய்லர் மேலும் குறிப்பிட்டார்.
"மகிழ்ச்சி ஏற்படவில்லை"
நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான சர்வதேச டி20 தொடரின் இறுதி போட்டியில் விளையாடியதன்மூலம் 100 டி20 போட்டிகளை விளையாடிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெற்றுள்ளார். ஆனால் இந்தியாவுடனான தொடரில் 5க்கு 0 என்ற அளவில் தங்களுடைய அணி தோல்வியடைந்த நிலையில், இந்த பெருமை தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.