லண்டன்: அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய இளம் அதிரடி வீரர் பிரித்வி ஷா 8 போட்டிகளில் விளையாடி 106 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இதனால் பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்டது. இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியும் ஆசிய போட்டிகளுக்கான அணியில் கூட பிரித்வி ஷா தேர்வு செய்யப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரித்வி ஷா சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இதன் காரணமாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் பிரித்வி ஷாவிற்கு முடிவுரை எழுதினர். ஆனால் பிரித்வி ஷா தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் தான் தியோதர் டிராபியில் பங்கேற்காமல் பிரித்வி ஷா இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.

இங்கிலாந்து நடக்கும் ஒருநாள் கோப்பை தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் பிரித்வி ஷா. ஆனால் இங்கிலாந்து மண்ணிலும் பிரித்வி ஷாவிக்கு முதல் போட்டி சரியாக அமையவில்லை. முதல் போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பிரித்வி ஷா மீண்டு வர வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டது.
ஆனால் சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலிலும் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். இருப்பினும் இதே ஆட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் துர்ஹம் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் சதம் விளாசி அசத்தியுள்ளார் பிரித்வி ஷா.
199 ரன்கள் இலக்கை நார்த்தம்டன்ஷையர் அணி துரத்தும் போது, தனியாளாக 76 பந்துகளில் 125 ரன்கள் விளாசி அசத்தினார். மொத்தமாக 7 சிக்சர் மற்றும் 15 பவுண்டரி என்று மீண்டும் 2018 பிரித்வி ஷாவை கண்முன் கொண்டு வந்துள்ளார். இதனால் அடுத்த உள்ளூர் சீசனில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.