சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாத அஸ்வின், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார்.
ஜூன் மாதம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி மிக எளிதாக இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதற்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததே காரணமாக அமைந்தது.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் என்று அத்தனை ஜாம்பவான்களும் ஒரே குரலில் அஸ்வின் இருந்திருந்தால் ஆட்டம் மொத்தமாக மாறியிருக்கும் என்று குரல் கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் அஸ்வின் மனதளவில் மோசமான நிலையில் இருந்தார். இத்தனை நாட்களாக நண்பர்களாக இருந்த இந்திய வீரர்கள், இனி வெறும் ஒரே அணியில் விளையாடும் வீரர்களாக மாறிவிட்டதாக கூறினார்.
அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே ரவிச்சந்திரன் அஸ்வின் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் டிஎன்பிஎல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என்று பரிசோதனை முயற்சிகளையும் அஸ்வின் செய்துகொண்டே இருந்தார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், இந்திய வீரர்கள் அத்தனை பேருக்கும் ஆதரவாக யூட்யூப்பில் பேசி வந்தார்.
முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி வீரர்களை விமர்சிக்கவே யூட்யூப் சேனலை நடத்தி வரும் நிலையில், ஒவ்வொரு வீரருக்கு ஆதரவாகவும் அஸ்வின் களமாடினார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அஸ்வினை சேர்க்காததன் விளைவை இந்திய அணி நிர்வாகம் உணர்ந்து உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்துள்ளது.
துணை கேப்டன்சி பதவி, டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம், இங்கிலாந்து மண்ணில் களமிறக்காதது என்று பிசிசிஐ எப்போதும் அஸ்வினுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்கியதே இல்லை. ஆனால் பிசிசிஐ தரப்பில் எடுக்கப்பட்ட ஒரேயொரு சிறந்த முடிவாக உலகக்கோப்பை தொடரில் அஸ்வினை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தவறவிட்ட கோப்பையை, இந்திய அணிக்காக அஸ்வின் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.