
ஆஃப்கானிஸ்தான்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நிலை, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக ஆஃப்கானிஸ்தான் அணியும் டாப் 10 இடங்களுக்குள் இருந்து வருகிறது. குறிப்பாக டி20 போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டிற்கு தாலிபான்கள் அனுமதி கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஃப்கான் அணியின் வளர்ச்சி
தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஆஃப்கானிஸ்தானில், 1990களுக்கு பிறகுதான் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டது. 10 வருட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2001ம் ஆண்டின் போதுதான் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் (ICC) ஆஃப்கானிஸ்தானும் ஒரு உறுப்பு நாடாக இணைந்தது. இதன் பின்னர் அந்த அணியின் வீர்ர்கள் பலரும் ஜொலிக்கத் தொடங்கியதால், தரவரிசைப் பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டது.

சிறந்த வீரர்கள்
அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் சாப்பூர் சாட்ரான், ஹமித் ஹாசன் உள்ளிட்ட வீரர்கள் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் மிக முக்கியமானவர்களாக திகழ்ந்தனர். அப்போது இருந்துதான் உலகில் ஆஃப்கான் அணிக்கு என தனி ரசிகர் பட்டாளங்கள் உருவானது. ஆனால் தற்போது மீண்டும் அந்நாட்டின் கிரிக்கெட் ஆபத்தில் உள்ளது.

முன்னாள் அதிகாரி கோரிக்கை
இந்நிலையில் ஐசிசி-ன் உறுப்பினராக இருக்கும் ஆஃப்கானிஸ்தான் அணியை வெளியேற்றிவிட வேண்டாம், அதனை காப்பாற்றுங்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் முதன்மை செயலாளர் சஃபிக் ஸ்டானிக்சாசி மனம் உருக கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, என்ன ஆஃப்கானி என்று அறிமுகம் செய்துக் கொள்வேன். அப்போது என்னிடம் பேசுவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் அந்த நிலையை கிரிக்கெட் மாற்றியது. கிரிக்கெட்டின் மூலம் ஆஃப்கானிஸ்தானுக்கு பெருமையையும், புகழையும் தேடிக் கொடுத்தோம். இதனால் தற்போது நான் ஆஃப்கானிஸ்தானை சேர்ந்தவன் என பெருமையாக கூறிக்கொள்வேன்.

கைவிடாதீர்கள்
இப்போது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் முகமாக ரஷித் கான், முகமது நபி ஆகியோர் திகழ்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் எங்கள் நாட்டின் கிரிக்கெட்டிற்கு எந்தவித பிரச்னையும் வந்துவிடக்கூடாது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பானது ஆஃப்கானிஸ்தானை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதன் எதிர்காலத்தை அழித்துவிடக்கூடாது என்பது தான் எனது கவலையாக உள்ளது.

தாலிபான்களின் நிலைபாடு
நான் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளேன். தாலிபான்களுடன் நான் இருந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன், அவர்கள் கிரிக்கெட்டை எதிர்ப்பவர்கள் அல்ல. அவர்கள் கிரிக்கெட் வீரர்களை பெருமையுடன் வரவேற்க்கக் கூடியவர்கள். தாலிபான்களின் ஆட்சியில் தான் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் கொண்டு வரப்பட்டது. எனவே அவர்கள் முழு ஆதரவையும் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

என்றும் அழியாது
ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் என்றும் அழியாது. கிரிக்கெட் தான் எங்கள் அடையாளம், அது எங்களின் ரத்தத்தில் ஓடுகிறது. நாங்கள் மீண்டும் பழைய இருள் காலத்தை நோக்கிச் செல்ல விரும்பவில்லை. எனவே ஐசிசி ஆஃப்கானை ஒதுக்காது என நினைக்கிறேன். ஆஃப்கானிஸ்தான் அணி இல்லாமல் கிரிக்கெட் சகஜமானதாக இருக்காது. அது கிரிக்கெட்டின் அழகு எனத் தெரிவித்துள்ளார்.

அணி வீரர்களின் நிலை என்ன?
இதனிடையே ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயார் ஆகி வந்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று தோல்வியை தழுவியது. அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இணைந்து மும்முணை போட்டியில் கலந்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தற்போது பிரிட்டனில் 'தி ஹண்ட்ரெட் ' எனும் கிரிக்கெட் போட்டியில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரி விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், ஆஃப்கானில் நிலவி வரும் பிரச்னை கிரிக்கெட் அணியை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஐசிசி-யிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். போட்டிகளில் பங்கேற்க முடிந்தவரை போராடுவோம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











