
தாலிபான் அமைப்பு
அனைத்து இடங்களிலும், தாலிபான் படைகளிடம், அந்நாட்டின் ராணுவப்படை வீழ்ந்து வருகிறது. இதனால் காபூலிலும் மிகப்பெரிய போரினை நடத்தி கைப்பற்றிவிடுவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் மோதலை தவிர்க்க அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். துணை அதிபர் சலேவும் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருத்தரப்புக்கும் சுமூகமான முடிவுகளை தருவதற்காக இடைக்கால அதிபராக முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இடைக்கால அரசு என்னும் யோசனையை தாலிபான்கள் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தான்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் நிலை, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக ஆஃப்கானிஸ்தான் அணியும் டாப் 10 இடங்களை பிடித்து வருகிறது. குறிப்பாக டி20 போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த சூழலில் அந்த அணியினர் தற்போது எங்கு உள்ளனர், அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் எங்குள்ளனர் என்ற கேள்விகள் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.

அணி வீரர்களின் நிலை என்ன?
ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயார் ஆகி வந்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று தோல்வியை தழுவியது. அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இணைந்து மும்முணை போட்டியில் கலந்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. பிரிட்டனில் 'தி ஹண்ட்ரெட் ' எனும் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் ரஷீத் கான் டிரன்ட் ராக்கெட்ஸ் அணிக்காகவும், முகமது நபி லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்

போட்டிகள் கேள்விக்குறி
இந்நிலையில் தற்போது தாலிபான்களின் தாக்குதல் உள்ளதால் ஆஃப்கானிஸ்தானின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு அடுத்ததாக டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர், என பல்வேறு போட்டிகள் வரிசையாக உள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது சந்தேகத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஃப்கானின் உள்நாட்டு தொடரான ஸ்பாகீசா கிரிக்கெட் தொடரும் திட்டமிடப்பட்டது.

அதிகாரி விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், ஆஃப்கானில் நிலவி வரும் பிரச்னை கிரிக்கெட் அணியை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஐசிசி-யிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். போட்டிகளில் பங்கேற்க முடிந்த வரை போராடுவோம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











