டெல்லி : நாடு சந்தித்துவரும் இந்த நெருக்கடியான நேரத்தில், மக்கள் நன்கொடைகள் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரியுள்ள நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பிரதமர் நிவாரண நிதிக்காக 25 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
அவரின் இந்த நன்கொடையை அடுத்து அவர் தன்னுடைய நிஜ உலக ஹீரோவாக மாறிவிட்டதாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மெய்சிலிர்த்துள்ளார்.

உலக அளவில் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 6.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சர்வதேச அளவில் 6.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக அளவில் அனைத்து நாடுகளும் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முன்னதாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள பிரதமர் மோடி, இந்த நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நிவாரண நிதிக்கு கைகொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றன. பிசிசிஐயும் 51 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதேபோல ரெய்னா 52 லட்சம் அளித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் விளையாட்டு வீரர்களும் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமாரும் 25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இந்த நேரத்தில் மக்களின் நல்வாழ்வு முக்கியம் என்று அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது நன்கொடை குறித்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா அவரை உச்சி முகர்ந்துள்ளார். இந்த நன்கொடை அளிப்பிற்கு பிறகு, அவர் தன்னுடைய நிஜ வாழ்வின் ஹீரோவாக மாறிவிட்டதாக பாண்டியா கூறியுள்ளார். மரியாதை மேலும் உயர்ந்துள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.