குயானா: 44 வயதில் சிபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் குயானா அமேசான் வாரியர்ஸ் அணியை எதிர்த்து ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவர்களில் வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. பூரன் 1 ரன்னிலும், பொல்லார்ட் டக் அவுட்டிலும், ரஸ்ஸல் 3 ரன்களிலும், பிராவோ 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து களமிறங்கிய குயானா அமேசான் வாரியர்ஸ் அணி 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு முன்பாக 5 முறை இறுதிப்போட்டிக்கு வந்த குயானா அணி இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இம்முறை இம்ரான் தாஹீர் தலைமையில் குயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
சாம்பியன் பட்டத்தை வென்ற பின் குயானா அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர், ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்து இம்ரான் தாஹிர் பேசுகையில், இந்த உணர்வு மிகவும் ஸ்பெஷலானது. நான் குயானா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது ஏராளமானோர் எதிர்மறை கருத்துகளை தான் கூறினார்கள். 44 வயதில் கேப்டன்சியை ஏற்பதெல்லாம் தேவையில்லாத விஷயமாக விமர்சித்தார்கள். தந்தையாகவும், கிரிக்கெட் வீரராகவும், கேப்டனானவும் பெருமையான தருணம் இது.
இந்த கோப்பையை வென்றதற்காக கடவுளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். என் மீது எனக்கு முழு நம்பிக்கையும் இருந்தது. நான் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது பலரும் நக்கலாக ஜோக் அடித்தார்கள். அதுதான் எனக்கு ஊக்கமாக அமைந்தது. எங்களின் அனலிஸ்ட் பிரசன்னாவுக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால் ஒரு நாளிற்கு 20 மணி நேரம் உழைக்கிறார். அதேபோல் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே எங்கள் அணியால் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்பிக்கை அளித்தார். என் வாழ்க்கை சாதித்த மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. இந்த அணியின் ஒவ்வொரு வீரரும் வெற்றிக்கான பசியுடன் இருந்தோம். அத்தனை வீரர்களாலும் தான் இதனை சாதிக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.