மீரட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள உள்ள இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் டோணி, ஆஸ்திரேலிய களங்களுக்கு ஏற்ற வகையிலான பேட்டுகளை தேடி மீரட் நகருக்கு சென்றுள்ளார்.
இந்தியாவில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முற்றாக வென்று அசத்தியது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி.

காயத்தில் இருந்து விடுபட்டுவரும் இந்திய அணியின் வழக்கமான கேப்டன் டோணி, வரும் டிசம்பர் 12ம்தேதி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெறும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். முன்னதாக டிசம்பர் 4ம்தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் டோணி பங்கேற்கவில்லை.
ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து இடுப்புக்கு மேலே எகிறி வரும் என்பதால், எடை குறைந்த பேட்டை பயன்படுத்துவதை இந்திய பேட்ஸ்மேன்கள் விரும்புகிறார்கள். ஆஸ்திரேலிய மைதானங்களில் எகிறி வரும் பந்துகளை சந்திக்க வசதியான பேட்டை தேடி உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள சரீன் ஸ்போர்ட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்ற பேட் தயாரிப்பு நிறுவனத்திற்கு டோணி சென்றுள்ளார்.
குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் சுமார் ஐந்து மணி நேரத்தை செலவிட்ட டோணி, மிக கவனமாக பேட்டுகளை தேர்ந்தெடுத்துள்ளார். 1260 கிலோ கிராம் எடை கொண்ட மொத்தம் 6 பேட்டுகளை அப்போது அவர் வாங்கியுள்ளார். எடை, பேட்டின் அளவு, மரத்தின் தரம் ஆகியவற்றையும் மிக கவனத்தோடு டோணி சோதித்து பார்த்து அதன்பிறகே பேட்டை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பேட் தயாரிப்பு நிறுவன தலைவர் ஜட்டின் சரீன் கூறுகையில், டோணி தனிப்பட்ட முறையில் இங்கு வந்ததால் மீடியாக்களுக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. பேட் தேர்வு குறித்த ரகசியங்களை வெளியிட வேண்டாம் என்று, டோணி என்னிடம் கேட்டுக்கொண்டதால், அவரின் வருகை குறித்த மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியாது என்றார்.
2011ல் தனது மனைவி சாக்ஷியுடன் டோணி இதே நிறுவனத்திற்கு வந்து பேட்டுகளை வாங்கியுள்ளார். மேலும், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், கபில் தேவ், ராகுல் டிராவிட் போன்ற முன்னணி வீரர்களும் இதே நிறுவத்தில் பேட் வாங்கிச் செல்வதுதான் வழக்கம்.