ரசிகர்களின் கனவு நாயகன்
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி எப்போதுமே அனைவருக்கும் பிடித்தமானவராக காணப்படுகிறார். அவர் விளையாடிய காலத்தில் மட்டுமின்றி, தற்போது விலகியுள்ள காலத்திலும் அவர் எது செய்தாலும் டிரெண்டாகி விடுகிறது. ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டாட்டத்தை துவக்கிய ரசிகர்கள்
இதனிடையே எம்எஸ் தோனியின் 39வது பிறந்தநாள் வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கென அவரது ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். அவரது பிறந்தநாளையொட்டி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் காணப்படுகிறது. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் என அனைத்திலும் இந்த புகைப்படத்தை டிரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.
காமன் டிபி புகைப்படம்
நெக்ஸ்ட்ஜென் ஸ்டூடியோஸ் வடிவமைத்துள்ள இந்த புகைப்படத்தில் ரசிகர்களின் கனவு நாயகன் தோனி பேட்டுடன கம்பீரமாக நின்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லும் அந்த புகைப்படத்தில் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகமாக இருப்பவர் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவருக்கு கீழே, சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளனர்.
பிரபலங்களும் புகைப்படம் பகிர்வு
ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தோனியின் பிறந்தநாள் டிரெண்டிங் ஆகிவருகிறது. வாட்ஸ்அப், டிவிட்டரில் டிபியாக பலர் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைத்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு உள்ளிட்ட பிரபலங்களும் இந்த புகைப்படத்தை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பலர் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மொத்தத்தில் வரும் 7ம் தேதிக்கான கொண்டாட்டம் இப்போதே துவங்கிவிட்டது.