டெல்லி: சாம்பியன்ஸ் தொடருக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஐசிசி பாதுகாப்பு குழு பாகிஸ்தானுக்கு இன்னும் சில நாட்களில் செல்ல உள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் பாகிஸ்தானுக்கு இந்திய அணி வீரர்களை அனுப்ப முடியாது என்று ஐசிசி நிர்வாகத்திடம் கூறியுள்ளது.
8 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 8 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதற்கான பணிகளில் தீவிரமாக செய்து வருகிறது. இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது.

ஏனென்றால் 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தான் பயணித்து எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதேபோல் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா - பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதவில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் பயணித்தால், இது புதிய தொடக்கமாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பணிகளை ஆய்வு செய்ய ஐசிசி பாதுகாப்பு குழு இன்னும் சில நாட்களில் செல்லவுள்ளது. இன்னொரு பக்கம் நவ.11ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சூழலில், பிசிசிஐ தரப்பில் ஐசிசி-யிடம் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
அதில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் மட்டும் நடத்தப்பட்டால் இந்திய வீரர்களை அனுப்ப வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்திற்கு பின்னரும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜெய்சங்கரின் வருகையின் போது, இந்திய அணி எந்த மைதானத்தில் விளையாட வேண்டுமோ, அந்த மைதானத்தை பிசிசிஐ தேர்வு செய்து கொள்ளலாம் என்ற சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணி வீரர்களின் பாதுகாப்பிற்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளும் செய்ய தயார் என்று கூறியதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி பேசுகையில், பாகிஸ்தான் மண்ணில் நடக்கவுள்ள போட்டிகளில் இந்திய அணியால் பங்கேற்க முடியாது என்று ஐசிசியிடம் தெளிவாக கூறியுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டையும் கூறிவிட்டோம். மத்திய அரசின் ஆலோசனை பெற்று ஐசிசியிடம் எங்களின் முடிவை கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2023ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பிசிசிஐ விருப்பத்திற்கு ஏற்ப ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. அதேபோல் உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வருவதற்கும் பாகிஸ்தான் நிர்வாகம் இறங்கி வந்தது. இதனால் இம்முறை பிசிசிஐ இறங்கி வர வேண்டும் என்று பாகிஸ்தான் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
அதேபோல் இந்திய அணி பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகளில் விளையாடிவிட்டு, உடனடியாக நாடு திரும்பவும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் மத்திய அரசு மற்றும் பிசிசிஐ தரப்பில் பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் ஐசிசி என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.