ஐதராபாத் அணியின் புதிய கேப்டன்.. அதிரடி வீரரை தூக்கிய காவ்யா மாறன்.. இனி கப் ஜெயிக்கலாம் பிகிலு!
ஐதராபாத்: ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முறை வலுவான படையை உருவாக்கி இருக்கின்றனர்.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்குகிறது. இறுதிப்போட்டி வரும் மே 28ம் தேதியன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலமும் சமீபத்தில் முடிந்தது.
இதனையடுத்து அனைத்து அணிகளும் தங்களது முதற்கட்ட பயிற்சிகளை தொடங்கிவிட்டன. சிஎஸ்கே, மும்பை உள்ளிட்ட பல அணிகள் மார்ச் முதல் வாரத்தில் பயிற்சி முகாமை தொடங்கவுள்ளன.

பயிற்சி ஏற்பாடுகள்
அனைத்து அணிகளிலும் எந்தெந்த வீரரை ப்ளேயிங் 11-ல் சேர்க்கலாம் என்ற குழப்பம் இருந்த சூழலில் ஐதராபாத் அணியில் மட்டும் கேப்டன் யார் என்ற குழப்பம் இருந்து வந்தது. டேவிட் வார்னரை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு கடந்தாண்டு வில்லியம்சனை கொண்டு வந்தனர். ஆனால் அவரும் சிறப்பாக செயல்படவில்லை எனக்கூறி இந்தாண்டுக்கான ஏலத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.

புதிய கேப்டன் அறிவிப்பு
இதனால் ஐதராபாத் அணியை தோல்வி பாதையில் இருந்து மீட்கக்கூடிய ஒரு கேப்டனை தேடி வந்தனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரமை தேர்வு செய்துள்ளனர். இந்தாண்டு ஏலத்தின் போது அந்த அணி தக்கவைத்த வீரர்களில் மார்க்ரமும் இருக்கிறார். இதனால் புதிதாக சேர்க்கும் வீரரிடம் கேப்டன்சியை ஒப்படைக்க முடியாது என நினைத்து ஏற்கனவே அணியில் இருக்கும் வீரரை கேப்டனாக்கியுள்ளனர்.

அயல்நாட்டு கேப்டன்
ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுமே முடிந்தவரை இந்தியாவை சேர்ந்த ஒரு வீரரை தான் கேப்டனாக நியமிக்க விருப்பப்படுகின்றன. ஏனென்றால் அப்போது தான் ப்ளேயிங் 11 காம்பினேஷனில் குழப்பம் வராது. ஆனால் ஐதராபாத் எப்போதுமே அயல்நாட்டு வீரர்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்து வருகிறது. இந்தாண்டு மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்தும் அவருக்கு கேப்டன்சி பொறுப்பை தரவில்லை.

மார்க்ரமின் ரெக்கார்ட்
தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரரான எய்டன் மார்க்ரம் ஐபிஎல் தொடரில் இதுவரை 18 இன்னிங்ஸ்களில் விளையாடி, 527 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 அரைசதங்களும் அடங்கும். மார்க்ரமின் சராசரி 40.54 ரன்களாக இருக்கின்றன. எனவே இந்தாண்டு அவர் எப்படி செயல்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications