மும்பை: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற இருந்த நிலையில் கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று மாசு காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் வட மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் காற்றின் மாசு தன்மை மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. குறிப்பாக டெல்லியில் காற்றின் மாசு தன்மை 349 என்ற அளவில் இருக்கின்றது. இது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடிய அளவுக்கு மிகவும் அதிகமாகும்.

நேற்று லக்னோவிலும் இதே அளவு காற்றின் மாசு அதிகமாக இருந்தது. இப்படி வட மாநிலம் முழுவதும் இதே நிலை நீடிப்பதால், அது கிரிக்கெட் போட்டிகளிலும் பாதிக்க வைக்கப் போகிறது என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக டி20 உலக கோப்பை வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது.
மும்பை, அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக டெல்லியில் நடைபெறும் போட்டிகள் தான் தற்போது வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்வளவு மாசு கேடான உள்ள இடத்தில் எப்படி வந்து கிரிக்கெட் விளையாடுவது என்று பலரும் அச்சத்தை எழுப்பி இருக்கின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு பனிப்பொழிவு ஏற்பட்டால் அது போட்டியே பாதிக்க வைக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் டி20 உலக கோப்பைக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது.
லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், தர்மசாலா கொல்கத்தா போன்ற நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் இந்தியா வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.