எங்களுக்காக கண்ணீர் சிந்தினார் ஜடேஜா.. அப்படியொரு மனிதரை பார்க்க முடியாது.. நெகிழும் ஆஃப்கான் வீரர்!
மும்பை: உலகக்கோப்பை தொடருக்கு பின் ஆஃப்கானிஸ்தான் அணியின் தோல்வியை ஏற்க முடியாமல் இந்திய ஜாம்பவான் அஜய் ஜடேஜா கண்ணீர் சிந்தியதாக அந்த அணியின் ஷாகிடி தெரிவித்துள்ளார். அஜய் ஜடேஜா கண்ணீர் சிந்திய வீடியோ இருப்பதாக கூறிய ஷாகிடி, அவரைப் போன்ற பாசிட்டிவான மனிதரை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் நடந்த ஐசிசி உலகக்கோப்பை தொடரின் போது ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக அஜய் ஜடேஜா பணியாற்றினார். இந்திய பிட்ச் மற்றும் ஆடுகளங்கள் குறித்த அஜய் ஜடேஜாவின் அறிவும், அவரின் ஆலோசனைகளும் ஆஃப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய சாதகத்தை கொடுத்தது. இதன் மூலமாக பல்வேறு அணிகளையும் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

அந்த உலகக்கோப்பை தொடரில் 6வது இடத்தில் நிறைவு செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெற்று சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் அண்மையில் நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்று புதிய வரலாறு படைத்தது.
இதன் மூலமாக இந்திய அணிக்கு பின் ஆசியாவின் 2வது வலிமையான அணியாக ஆஃப்கானிஸ்தான் அணி உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சிக்கு இந்திய ஜாம்பவான் அஜய் ஜடேஜா மிக முக்கியமான வழிகாட்டியாக இருந்ததாக அந்த அணியின் ஹஷ்மத்துல்லா ஷாகிடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், அஜய் ஜடேஜா மிகவும் பாசிட்டிவான மனிதர்.
என் வாழ்க்கையில் அவரை போன்ற ஒரு பாசிட்டிவான மனிதரை பார்த்ததே இல்லை. ஓய்வறையில் இருந்து எங்களுக்கு எப்போதும் ஊக்கம் அளித்து கொண்டே இருப்பார். குறிப்பாக அழுத்தமான சூழல்களில், அவர் பேசிய வார்த்தைகள் அவ்வளவு உதவியாக இருந்தன. இந்திய ஆடுகளங்கள், பிட்ச்கள் குறித்து சிறந்த அறிவு அவரிடம் இருக்கிறது.
உலகக்கோப்பை முடிவடைந்த பின், அவர் பிரிய மனமில்லாமல் எங்களுக்காக கண்ணீர் சிந்தினார். அந்த வீடியோ கூட என்னிடம் இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியையும், மக்களையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். இப்போது அஜய் ஜடேஜாவுடன் தொடர்ந்து உரையாடி கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உலகக்கோப்பை தொடரின் போது சுமார் 2 மாதங்கள் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் இணைந்து பணியாற்றிய அஜய் ஜடேஜா ஒரு ரூபாய் கூட ஊதியமாக வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் ஊதியமாக கொடுக்க தயாராகி இருந்த போதும், அவர் ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் சிறப்பாக விளையாடியதே எனக்கான ஊதியம் மற்றும் பரிசு என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications