வைபவ் சூர்யவன்ஷி குடும்பத்திற்கு ரஹானே முக்கிய அறிவுரை.. "புகழ் போதையில் சிக்காமல் பார்த்துக்கோங்க”
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றி அவரது குடும்பத்தினர் மிகவும் ஒழுக்கத்துடன் வழிநடத்த வேண்டும் என்று முன்னாள் மூத்த வீரர் அஜின்கியா ரஹானே அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற அஜின்கியா ரஹானே, 'ஸ்டிக் டு கிரிக்கெட்' என்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்களான மைக்கேல் வாகன், அலஸ்டர் குக் ஆகியோர் நடத்தும் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது வைபவ் குறித்துப் பேசிய அவர், "இந்த வயதில் வைபவுக்குத் தேவை சரியான வழிகாட்டுதல்தான். அது அவரது குடும்பத்தில் இருந்துதான் வர வேண்டும். இவ்வளவு இளம் வயதில் புகழ், விளம்பரம், பயணம் எனப் பல விஷயங்கள் அவரைச் சுற்றி நடக்கும். எனவே, அவரது குடும்பம் மிகவும் உறுதியாக இருந்து, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு அவரை ஒழுக்கமாக வழிநடத்த வேண்டும்" என்றார்.

மேலும், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் வைபவை ஆதரித்துப் பேசினாலும், அவரை அவசரமாக டெஸ்ட் போட்டிகளுக்குள் தள்ளக் கூடாது என்று ரஹானே எச்சரித்துள்ளார். "ஐபிஎல் தொடரும் சர்வதேச கிரிக்கெட்டும் முற்றிலும் வேறுபட்டவை. ஐபிஎல் தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றது பெரிய விஷயம்தான். ஆனால், நாட்டுக்காக விளையாடும்போது ஏற்படும் அழுத்தம் மிகப்பெரியது. ஐபிஎல் தொடரில் 4 அல்லது 5 ஓவர்களில் 70 ரன்கள் இலக்கை எட்டுவது எளிதாக இருக்கலாம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அது வேறு மாதிரியான சவால். எனவே, அவரை சுதந்திரமாக விளையாட விட்டு, இயல்பாக வளர அனுமதிக்க வேண்டும்" என்று ரஹானே கூறினார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி அந்த டி20 தொடரில் 14, 13, 15 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தடுமாறினார். பின்னர் ஜிம்பாப்வே தொடரில் 50, 20 மற்றும் 81 ரன்கள் எடுத்து அசத்தினார். 2026 ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகள் வரவுள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகள் வைபவ்-வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications

