லக்னோ: ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான இராணி கோப்பை தொடரின் சிறப்பாக ஆடிய மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே 97 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் பலரும் ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
இராணி கோப்பைக்கான போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரஹானே 86 ரன்களும், சர்ஃபராஸ் கான் 54 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.

இதனால் 2வது நாளில் அனுபவ வீரர் ரஹானே சதம் அடித்து தனது பேட்டிங் ஃபார்மை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் யாஷ் தயாள் இருவரும் பவுலிங் செய்து வந்தனர். நிதானமாக விளையாடிய இருவரும் ரிஸ்க் எடுக்காமல் ஆடி வந்தனர். இதனால் 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடி வந்த ரஹானே, 97 ரன்களில் களத்தில் இருந்தார். ஒரு பவுண்டரி அடித்தால் சதம் அடித்துவிடலாம் என்று பார்க்கப்பட்டது. அப்போது யாஷ் தயாள் வீசிய ஷார்ட் பால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வேகத்துடன் வர, ரஹானே பேட்டை வீசினார். ஆனால் அந்த பந்து கிளவுஸை உரசி சென்று, விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் கைகளில் சென்று விழுந்தது.
அப்போது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று அப்பீல் கேட்க, ஆனால் கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பின்னர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடனடியாக டிஆர்எஸ் முறையீடு செய்தார். அதன்பின் ரீபிளேவில் பந்து ரஹானேவின் கிளவுஸில் உரசியது தெரிய வந்தது. பின்னர் அஜிங்கியா ரஹானே 97 ரன்களில் பரிதாபமாக பெவிலியனை நோக்கி நடந்து சென்றார்.
பின்னர் வந்த ஷாம்ஸ் முலானி 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 280 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. மேலும் வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கு தேர்வாகி இருந்த யாஷ் தயாள், இராணி கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரஹானே போன்ற அனுபவ வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி இருப்பது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.