"2 ஆண்டுகள் தண்ணீர் பாட்டில் தூக்கினேன்".. இந்திய அணியில் நடந்தது குறித்து மனம் திறந்த ரஹானே
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றும், விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் 2 ஆண்டுகள் 12வது வீரராக தண்ணீர் பாட்டில் சுமந்த தனது கடினமான காலகட்டம் குறித்து முன்னாள் வீரர் அஜின்கியா ரஹானே உருக்கமாகப் பேசியுள்ளார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அஜின்கியா ரஹானே, தனது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசியுள்ளார்.கடந்த 2011ல் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான ரஹானே, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், "2011ல் நான் முதன்முதலில் இந்திய அணிக்குள் நுழைந்த போது, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக எனக்கு 2 ஆண்டுகள் ஆனது. அந்த 2 ஆண்டுகளில் சுமார் 20 போட்டிகளில் நான் 12வது வீரராக மட்டுமே பெஞ்சில் அமர்ந்திருந்தேன்" என்றார்.

மேலும் பேசிய அவர், "அது எனது வாழ்க்கையில் மிகவும் சவாலான காலகட்டம். அப்போது என்னிடம் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று மற்றவர்களின் அனுதாபத்தைப் பெறுவது, அல்லது என்னை நானே மேம்படுத்திக் கொள்வது. 12வது வீரராக இருப்பதிலோ, சக வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதிலோ, அவர்களுக்கு உதவுவதிலோ எந்த தவறும் இல்லை. நான் அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டேன். பெஞ்சில் அமர்ந்து ஆட்டத்தை கவனித்தது எனது மனநிலையை வளர்க்க உதவியது. இதன் காரணமாகவே என்னால் நீண்ட காலம் விளையாட முடிந்தது" என்று கூறினார்.
தனது பொறுமை குறித்துப் பேசிய ரஹானே, "மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும் போதே எனக்குள் பொறுமை வளரத் தொடங்கிவிட்டது. உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன் வைக்கும் போது, இந்திய அணியில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் மூத்த வீரர்களுடன் பேசிய பிறகு, நமக்கான நேரம் வரும் போது எல்லாம் நடக்கும் என்பதைப் புரிந்து கொண்டேன். நீண்ட காலம் விளையாட பொறுமை மிகவும் அவசியம்" என்று ரஹானே நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். கடந்த 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரஹானே தனது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
