மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஹானே தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரஹானே களமிறங்கி விளையாடினார். இதில் முதல் இன்னிங்ஸில் 89 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களும் ரஹானே எடுத்திருந்தார்.
இதனால் அதன் பிறகு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரஹானே சேர்க்கப்பட்டார். அதன் பிறகு புதிய தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் பொறுப்பேற்றதை அடுத்து ரஹானேக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் கொஞ்சமும் மனம் தளராத ரகானே ரஞ்சிப் போட்டி உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

இருந்தபோதிலும் தமக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரகானே கவலை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன் நான் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அதன் பிறகு நான் அதிக ரன்கள் குவித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு அதன் பிறகு மீண்டும் என்னை அணியை விட்டு நீக்கி விட்டார்கள்.
இதில் நான் என்ன செய்ய முடியும்? என் கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறது? உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் நான் நன்றாக விளையாடினேன். ஒரு அனுபவ வீரர் அணிக்கு மீண்டும் வருகிறார் என்றால் அவரை குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று தொடரிலாவது பயன்படுத்துவார்கள். தென்னாப்பிரிக்கா தொடர் மிகவும் சவாலானது. இதனால் அந்த தொடரில் என்னை சேர்ப்பார்கள் என நினைத்தேன்.
ஆனால் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வளவு ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடியும் என்னை சேர்க்கவில்லையே என்று நினைத்து நான் வருத்தப்பட்டேன். நான் ஏன் நீக்கப்பட்டேன் என்பது குறித்து என்னிடம் யாரும் முறையாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் எப்போது அணியை விட்டு நீக்கப்பட்டாலும் என்னை ஏன் நீக்கினீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களை என்றும் தொடர்பு கொண்டு பேசமாட்டேன்.
அது எனக்கு பிடிக்காது. பலரும் அஜித் அகர்கரிடம் சென்று காரணத்தைக் கேள் என்று கூறினார்கள். ஆனால் அஜித் அகர்கர் என்னிடம் பேச தயாராக இல்லாத போது நான் எப்படி அவருடன் பேச முடியும். நான் அவரிடம் தனியாக நேருக்கு நேர் பார்த்துப் பேச வேண்டும் என்று நினைத்தேன்.
நான் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற கடுமையாக உழைத்த பிறகும் என்னை அணியை விட்டு நீக்கினார்கள். சரி அடுத்த தொடரில் என்னை சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் எனது கையில் ஒன்றும் இல்லை. ஆனால் மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கின்றது. இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி சாதிக்க வேண்டும் என்ற வெறி இன்னும் இருக்கின்றது. இதனால் தான் ரஞ்சிப் போட்டியில் தொடர்ந்து விளையாடி மும்பை அணிக்காக ரன்கள் சேர்த்து வருகிறேன். என்னுடைய குறிக்கோள் எல்லாம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வரவேண்டும் என்பதுதான் என்று ரகானே கூறியுள்ளார்.