பிசிசிஐயின் முக்கிய ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அஜித் அகர்கர்.. பதவியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு
மும்பை: பிசிசிஐ நடத்திய முக்கியமான ஆய்வுக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரான அஜித் அகர்கர் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மும்பையில் நடைபெற்ற இந்த பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்தில், செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ சிறப்பு மையத் தலைவர் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்திய கிரிக்கெட்டின் அடுத்தகட்ட திட்டங்கள், வீரர்களுக்கு அடிக்கடி ஏற்படும் காயங்கள், சமீபத்திய அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இருப்பினும், தேர்வு கமிட்டி தலைவர் அஜித் அகர்கர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காதது பலரது மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கூட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட்டப்பட்டதால், மும்பையில் இல்லாத அகர்கரால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தேவஜித் சைகியா விளக்கம் அளித்துள்ளார்.முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான அகர்கர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இணையவழியில் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கும் அகர்கரால், இந்த முறை ஆன்லைனில் கூட இணைய முடியவில்லை என்று சைகியா தெரிவித்துள்ளார்.
"அவர் இன்று வெளியூரில் இருந்ததால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. மிகக் குறுகிய கால அவகாசத்தில் இந்த கூட்டம் கூட்டப்பட்டதே இதற்குக் காரணம். எங்களது தேர்வு கமிட்டியின் தலைவர் அஜித் அகர்கர் ஊரில் இல்லை, எனவே அவரால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், அவர் இருக்கும் பகுதியில் இணைய வசதி சரியாக இல்லாததால் அவரால் ஆன்லைன் மூலமாகவும் இணைய முடியவில்லை" என்று சைகியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரோஹித் சர்மாவை அணியில் இருந்து விடுவிக்க தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதில் இருந்தே, அகர்கரின் பதவி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அகர்கரின் தற்போதைய ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருக்கிறது. இருப்பினும், அவரது ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், இன்றைய கூட்டத்தில் அகர்கரின் ஒப்பந்த நீட்டிப்பு குறித்து ஏதேனும் விவாதிக்கப்பட்டதா என்று சைகியாவிடம் கேட்டபோது, "இன்றைய கூட்டத்தில் அதுபோன்ற எந்த விவாதமும் நடைபெறவில்லை" என்று அவர் பதிலளித்தார்.
அகர்கரின் பதவிக் காலத்தில், இந்திய அணி இரண்டு டி20 உலகக் கோப்பைகள், 2025 சாம்பியன்ஸ் டிராபி உட்பட மூன்று ஐசிசி கோப்பைகளையும், இரண்டு ஆசிய கோப்பைகளையும் வென்றுள்ளது. மேலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியையும் இந்திய அணி எட்டியது.இவரது பதவிக் காலத்தில்தான் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்தும், ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தங்களது ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

