அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. பிசிசிஐ பட்டியலில் 2 முன்னாள் வீரர்கள்.. புதிய தேர்வுக் குழு தலைவர்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் விடுவிக்கப்பட உள்ளதாகவும், அவருக்குப் பதிலாக பிசிசிஐ ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ள முன்னாள் வீரர்கள் இருவரில் ஒருவர் புதிய தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் அகர்கரின் பதவிக்காலம் 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில், பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள பெரும்பான்மை நிர்வாகிகள் அகர்கருக்கு பதவி நீட்டிப்பு வழங்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய அணித் தேர்வுக் கூட்டமே அகர்கர் தலைமை தாங்கிய கடைசி ஆலோசனைக் கூட்டமாகக் கருதப்படுகிறது. புதிய தேர்வுக் குழு தலைவர் பதவிக்கான ரேசில் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் கொண்டவர்கள்.
மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவிற்கும் பிசிசிஐ நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலே அகர்கரின் பதவிக்கு சிக்கலாக மாறியுள்ளது. 2027 உலகக் கோப்பை திட்டத்தில் ரோஹித் சர்மா இல்லை என தேர்வுக்குழு முடிவெடுத்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 138 ரன்கள் விளாசி ரோஹித் பதிலடி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவும் ரோஹித் சர்மாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
இந்தத் தொடர் மோதல்களின் எதிரொலியாக, தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து அகர்கரை கழற்றிவிட்டு புதிய நிர்வாகியைக் கொண்டுவர பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பார்த்திவ் படேல் அல்லது பிரக்யான் ஓஜா ஆகிய இருவரில் யாருக்கு தேர்வுக் குழு தலைவர் பதவி கிடைக்கும் என்பதே இப்போது இந்திய அணி வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.


Click it and Unblock the Notifications

