மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் டோணி ஒரு கேப்டனாக மட்டுமின்றி வீரராகவும் தொடருவது பற்றி பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறியதற்கு டோணி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

ஈஎஸ்பிஎன் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அகர்க்கர், "தென் ஆப்பிரிக்க தொடரில் டோணி ஒரு கேப்டனாக மட்டுமின்றி அணி வீரராகவும் சிறப்பாக செயல்படவில்லை. அவரது இடம் பற்றி பரிசீலிக்க வேண்டிய நேரம் இது" என்று கூறியிருந்தார்.
இதற்கு டோணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆஸி. தொடரில் 7 முறை தொடர்ந்து டக்-அவுட் ஆகி சாதனை படைத்த அகர்க்கர் இதை பேசக்கூடாது என்றும், அவர் பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்றும், டோணி இன்னும் சிறந்த வீரர்தான் என்றும் பல வகைகளிலும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
சிலர், அகர்கர் கருத்து சரிதான் என்றும் கூறியுள்ளனர். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டோணி சிறப்பாகவே ஆடினார் என்று சிலர் அவரது திறமைக்கு வக்காலத்து வாங்கியுள்ளனர்.
எனினும், இந்திய அணியில், டோணியின் தலை மீது கத்தி தொங்கவிடப்பட்டுள்ளதாகவே பிசிசிஐக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.