மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்த நிலையில் இது முடிந்த பிறகு ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. அதன் பிறகு இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அஜித் அகார்கர் அழைப்பு விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதன்படி தேர்வு குழு தலைவராக அஜித் அகார்கள் பொறுப்பேற்ற பிறகு இன்னும் இந்திய அணி நிர்வாகத்தை சந்திக்கவில்லையாம். இதன் காரணமாக டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவை சந்தித்து பல ஆலோசனைகளை நடத்த அஜித் அகார்கர் முடிவு செய்திருக்கிறார். மேலும் ஆசிய கோப்பை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவை அடுத்தடுத்து சில நாட்களில் நடைபெற இருக்கிறது.
இதற்கான இந்திய அணியை தயார் செய்வதற்காக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் அணியை எப்படி தயார் செய்வது? எத்தனை வேகப் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொள்வது? சுழற் பந்துவீச்சாளர்கள் யாராக இருக்க வேண்டும்? விக்கெட் கீப்பர் யாராக இருக்க வேண்டும்? அணியில் எத்தனை ஆல் ரவுண்டர் இடம்பெற வேண்டும்.
பேட்டிங் வரிசை எந்த அளவிற்கு ஆழமாக இருக்க வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு 20 பேரை தேர்வு செய்து அதிலிருந்து 15 பேரை அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. இந்த அணிதான் ஆசிய கோப்பையில் களமிறங்கும் என்றும் தெரிகிறது.
மேலும் இந்த கூட்டத்தில் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு எந்த மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் உலக கோப்பையை எதிர்கொள்ள பயிற்சியாளர் என்ற முறையில் டிராவிட் எந்த பிளான்களை வைத்திருக்கிறார். ரோகித் சர்மா எவ்வாறு அணுகி வழிநடத்த போகிறார். ஒரு தேர்வு குழுவின் தலைவராக தான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கேட்டறிய அஜித் அகார்கர் முடிவெடுத்து இருக்கிறார்.