அம்பயர் இருக்கலாம், கோச் இருக்கலாம்.. வீரர்கள் மட்டும் கூடாதா?.. பிசிசிஐக்கு பாக். வீரர் கேள்வி
கராச்சி: ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர்கள் இருக்கலாம்... பயிற்சியாளர்கள் இருக்கலாம்.. ஆனால் வீரர்களை மட்டும் சேர்க்க மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறுவது நியாயமற்றது. உலகிலேயே சிறந்த டுவென்டி 20 தொடர் ஐபிஎல் தான் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறுவதாக இருந்தால் பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாட்டு வீரர்களையும் அதில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், தன்னைப் போலவே பிற பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு பாகிஸ்தான் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தனது மனக்குறையைக் கொட்டியுள்ளார் அஜ்மல். அவரது பேட்டியிலிருந்து...

எங்களுக்கும் வாய்ப்பளியுங்கள்
பாகிஸ்தான் வீரர்களுக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்க பிசிசிஐ முன்வர வேண்டும்.

பயிற்சியாளர்கள் -நடுவர்களுக்கு வாய்ப்பு தர்றீங்களே
பாகிஸ்தானைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நடுவர்களுக்கு வாய்ப்பளிக்கும்போது வீரர்களை மட்டும் ஒதுக்குவது நியாயமா...

பெஸ்ட்ன்னு சொன்னா இதைச் செய்யுங்க
உலகிலேயே மிக்ச சிறந்த டுவென்டி 20 தொடர் ஐபிஎல் என்று பிசிசிஐ கூறுமானால் பாகிஸ்தான் வீரர்களையும் விளையாட அனுமதிக்க வேண்டும். அதுதான் நியாயமானதாக இருக்க முடியும்.

பேசித் தீருங்கள்
பிரச்சினைகளை பேசித் தீர்வு காண முன்வர வேண்டும். அதற்காக வீரர்களை பலியிடக் கூடாது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவேன். என்னைப் போலவே மேலும் பல பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வத்துடன் உள்ளனர் என்றார் அவர்.

அப்ரிதியும் ஏக்கம்
இதேபோல சில தினங்களுக்கு முன்பு மூத்த வீரர் ஷாஹித் அப்ரிதியும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருப்பது குறித்து ஏமாற்றமும் ஏக்கமும் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

வாசிம் அக்ரம்
தற்போது ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் மட்டும்தான் இடம் பெறுவதில்லை. அதேசமயம், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டார் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications