டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி ஒவ்வொரு ஓவருக்கும் சராசரியாக 10 ரன்கள் என்ற விகிதத்தில் ரன் குவித்து வந்தது. 200 ரன்களைத் தாண்டி ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தோனி மற்றும் சிவம் துபே கடைசி மூன்று ஓவர்களில் பேட்டிங் செய்தபோது, ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்துவீசினார். 19-வது ஓவரில் அவர் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மறுபுறம், துஷார் தேஷ்பாண்டே 18-வது ஓவரில் நான்கு ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். 20-வது ஓவரில் ஆகாஷ் மத்வால் ஏழு ரன்கள் விட்டுக் கொடுத்து தோனி, சிவம் துபே என இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக சிஎஸ்கே அணியால் 200 ரன்களை எட்ட முடியவில்லை; 187 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த இலக்கை 17.1 ஓவரிலேயே எட்டியது. சிறப்பாகப் பந்துவீசி ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருது வென்றார். வைபவ் சூர்யவன்சி 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தபோதும், அவரை விட ஆகாஷ் மத்வாலின் செயல்பாடுகள்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்குக் காரணம் என்பதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆகாஷ் மத்வால் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவருக்கு முன்னாள் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஷேன் பான்ட் சிறப்பு பயிற்சிகள் அளித்து இருக்கிறார். அதன் பலனாகவே தற்போது ஐபிஎல் தொடரில் ஆகாஷ் மத்வால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது அனைத்து லீக் போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விளையாடிய 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.