நெல்லை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான முதல் அரையிறுதியில் திண்டுக்கல் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி அபிநவ் முகுந்த் (91), தினேஷ் கார்த்திக் (48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.
தூத்துக்குடியை தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களமிறங்கியது. அந்த அணிக்கு ஜெகதீசன், ரகுநாத் ஆகியோர் தொடக்கம் தந்தனர். ஒருபுறம் ரகுநாத் நிதானமாக விளையாட மறுமுனையில் ஜெகதீசன் அதிரடியாக விளையாடினார். ஆட்டத்தின் 6-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் ரகுநாத் (7), விக்டர் (0), கங்கா ஸ்ரீதர் ராஜூ (0) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் திண்டுக்கல் அணியின் வெற்றி கேள்விக்குறியானது.
ஜெகதீசன் 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த வெங்கடராமன் 26 பந்தில் 40 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களால் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் திண்டுக்கல் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே எடுக்க முடிந்தது. அதனால் தூத்துக்குடி அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடக்கும் 2-வது அரையிறுதி போட்டியில் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ்) அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தூத்துக்குடி அணியுடன் மோதும்.