திண்டுக்கல்: டி.என்.பி.எல் கிரிக்கெட்டில், திருவள்ளூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
திருவள்ளூர் வீரன்ஸ், ஆல்பர்ட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திண்டுக்கலில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற திருவள்ளூர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. திருவள்ளூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 59 (48) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தூத்துக்குடி அணியில் முன்னாள் வீரர் பாலாஜி அற்புதமாக பந்து வீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் விளையாடிய தூத்துக்குடி அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் காந்தி அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகுந்த் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தோற்கடித்தது. தொடர் தோல்விகளை அடைந்து வந்த தூத்துக்குடி அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.