கேப் டவுன் : தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் அல்பி மார்கல், மொசாம்பிக் நாட்டின் சிறையில் மாட்டி தவித்த கதையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அல்பி மார்கல் ஐபிஎல் போட்டிகள் மூலம் நமக்கு நினைவிருக்கலாம். சிஎஸ்கே அணிக்காக முதல் ஐபிஎல்-இல் ஆடினார். அதன் பின் மற்ற அணிகளிலும், தென்னாபிரிக்க அணியிலும் கிரிக்கெட் ஆடி இருக்கிறார். இவரது சகோதரர் மோர்னே மார்கல், தென்னாபிரிக்கா அணியின் முன்னணி பந்துவீச்சாளர்.
ஒருமுறை, வேட்டையாட சென்றுவிட்டு தன் தோட்டக்காரரிடம், "காரை சுத்தம் செய்து வை" என கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது காரின் பின்னால் இருந்த சில வெடி குண்டுகளை என்ன செய்வது என தெரியாமல், அல்பி மார்கலின் பையில் போட்டு வைத்து விட்டார்.
பின் சில நாட்கள் கழித்து பொழுதுபோக்காக மொசாம்பிக் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்ற மார்கல், அதே பையை எடுத்துச் சென்றுள்ளார். நாட்டிற்கு திரும்பும் போது விமான நிலையத்தில் சோதனையின் போது அந்த வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தன் நண்பர்களிடம் நீங்கள் செல்லுங்கள் நான் வந்துவிடுவேன் என கூறி இருக்கிறார். எனினும், இரண்டு மணி நேரம் கழித்து கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் மொழி பிரச்சனையால் எந்த உதவியும் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இரண்டு பேர் அவருக்கு எப்படி நடந்து கொண்டால் பிரச்சனை இல்லாமல் சிறையில் இருக்கலாம் என்பது பற்றி கூறி இருக்கின்றனர். அதன் படி, மேற்கொண்டு பிரச்சனை இல்லாமல் இரண்டு நாட்கள் அங்கே இருந்துள்ளார். அந்த நேரத்தில் வெளியே இருந்த அவரது நண்பர்கள், முயற்சி செய்து அவரை வெளியே கொண்டு வந்துள்ளனர்.
இனிமே, பழைய பையை எடுத்துட்டு ஊருக்கு கிளம்பறவங்க எல்லாம் ஒரு தடவை நல்லா சரி பார்த்துட்டு போங்கப்பா...அப்புறம் களி தான் திங்கணும்..