
இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் தொடர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு வரும் 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இதையொட்டி இங்கிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனைகள்
கொரோனா தொற்று பாதிப்பு சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் நிலையில், பயோசெக்யூர் முறையில் நடத்தப்பட உள்ள இந்த போட்டிகளுக்காக பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரிசல்ட் நெகட்டிவ்
இங்கிலாந்து அணியினருக்கு முதல்கட்டமாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ள நிலையில், இரண்டாவது கட்டமாகவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வீரர்கள், ஊழியர்கள், மைதான ஊழியர்கள், இசிபி ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக இசிபி தெரிவித்துள்ளது.

20 நாட்களாக பரிசோதனைகள்
இதனிடையே, இதுவரை 702 முறை கோவிட் 19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இசிபி தெரிவித்துள்ளது. கடந்த 3ம் தேதி முதல் 23ம் தேதிவரை இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒருவருக்கே பலமுறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இசிபி மேலும் கூறியுள்ளது.

2வது கட்ட பரிசோதனை
ஜோப்ரா ஆர்ச்சருக்கும் இரண்டாவது கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் இன்றுமுதல் பயிற்சியில் இணைய உள்ளதாகவும் இசிபி தெரிவித்துள்ளது. அவரது வீட்டில் ஒருவருக்கு கடந்த ஒருவாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications