
2014ல் அறிமுகம்
1983ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை முதன் முதலாக வென்று உச்சிமுகர்ந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் ரோஜர் பின்னி. இவரது மகன் தான் ஸ்டூவர்ட் பின்னி. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், கடந்த 2014ம் ஆண்டு ஒரு ஆல் ரவுண்டராக இந்திய அணியில் அடியெடுத்து வைத்தார். இதுவரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 194 ரன்களும், 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 230 ரன்களும், 3 டி20 போட்டிகளில் விளையாடி 35 ரன்களும் எடுத்துள்ளார். அதேபோல் டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 20 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

வாய்ப்புக்காக போராட்டம்
கடைசியாக 2016-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஸ்டூவர்ட் பின்னி விளையாடியுள்ளார். ஆனால் புற்றீசல் போல இளம் வீரர்கள் அடுத்தடுத்து இந்திய அணிக்குள் நுழைய, தருமாறினர் பின்னி. குறிப்பாக, ஹர்திக் பாண்ட்யாவை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கண்டறிந்த பிறகு, பின்னிக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. வாய்ப்புக்காக அவர் போராட வேண்டியிருந்தது. எனினும், அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.

95 ஐபிஎல் போட்டிகள்
இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 880 ரன்களும், 22 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகளின் சார்பாக ஸ்டூவர்ட் பின்னி விளையாடியுள்ளார். இந்த நிலையில் முதல் தர மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஆக.30) ஸ்டூவர்ட் பின்னி அறிவித்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த பிசிசிஐ, இந்திய அணியின் கேப்டன்கள், கர்நாடகா கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான மயந்தி லாங்கர், நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கணவரின் போட்டோவை பகிர்ந்திருந்தார்.

4 ரன்களுக்கு 6 விக்கெட்
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடியது. அப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்டூவர்ட் பின்னியை 78 ரன்கள் அடித்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியம் தருணம் எனலாம். எல்லாவற்றையும் விட அவரது மிகச் சிறந்த போட்டி என்றால் அது வங்கதேசத்துக்கு எதிரான மேட்ச் தான். 2014-ல் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் அனில் கும்ப்ளேயின் சிறந்த பவுலிங் சாதனையை முறியடித்தார். வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் போட்டியில், முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடியது. அதில், பின்னியும் இடம் பெற்றிருந்தார். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிறகு, வங்கதேசம் பேட்டிங் செய்த போது, அந்த அணியை தனது பந்துவீச்சில் மூலம் பின்னி சீர்குலைத்துவிட்டார். 4.4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை 58 ரன்களுக்குச் சுருட்டினார். இந்தப பந்து வீச்சு உலக சாதனையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருப்பி கொடுப்பேன்
இந்திய கிரிக்கெட் வாரியம், மற்றும் கர்நாடகா கிரிக்கெட் வாரியம் ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள், வெல் விஷர்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த ஸ்டூவர்ட் பின்னி, "கிரிக்கெட் என் ரத்தத்தில் ஓடுகிறது. எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டுக்கு நான் திருப்பி கொடுப்பேன். எனது அடுத்த இன்னிங்ஸிற்கு ஆதரவளிக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்" என்று ஸ்டூவர்ட் பின்னி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications