மார்ச் 29ம் தேதி துவக்கம்
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 29ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கென ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான சர்வதேச அளவிலான வீரர்களை கடந்த டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஏலத்தின்மூலம் தேர்வு செய்தன. இந்நிலையில், அடுத்த மாதம் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே கிரிக்கெட் ரசிகர்களிடம் துவங்கியுள்ளது.
பிசிசிஐ அறிவிப்பு
தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும்வகையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஆல் ஸ்டார் போட்டி நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை இரு பிரிவாக பிரித்து இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டடிருந்தது.
பிசிசிஐ தலைவர் அறிவிப்பு
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆல் ஸ்டார் போட்டி ஐபிஎல் தொடருக்கு பின்பே நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தற்போது அறிவித்துள்ளார். இந்த போட்டியை நடத்துவதற்கான டெண்டர்களை பெறுவதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதால் ஐபிஎல் நிர்வாகக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி உறுதி
வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்ததினத்தையொட்டி அந்நாடு நடத்த திட்டமிட்டுள்ள உலக அணி லெவன் மற்றும் ஆசிய அணி லெவன் போட்டியுடன், தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ள ஆல் ஸ்டார் போட்டி எந்தவகையிலும் ஒத்திருக்காது என்றும் சவுரவ் கங்குலி உறுதிபட தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலி அறிவிப்பு
ஐபிஎல் போட்டிக்கு பின்பே ஆல் ஸ்டார் போட்டி நடத்தப்படும் என்று கங்குலி அறிவித்துள்ள நிலையில், அந்த போட்டி நடத்தப்படும் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த போட்டி அகமதாபாத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோட்ரெடா மைதானத்தில் தான் நடத்தப்படும் என்றும் இதற்கான ஆயத்த பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரர்களுக்கு போதிய ஓய்வளிக்க திட்டம்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக போட்டிகளை சந்தித்து வரும் இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் தொடருக்கு பின்பு போதிய ஓய்வளிக்க உள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே அடுத்த தொடர்கள் திட்டமிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.