மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட் பிளேயிங் லெவன்,ஆல் டைம் ஒரு நாள் பிளேயிங் லெவன், ஆல் டைம் உலகக் கோப்பை பிளேயிங் லெவன் என பல பட்டியல்களை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் தற்போது நீங்கள் பார்க்கப் போவது மிகவும் வித்தியாசமான பட்டியலாகவும். ஆம் கிரிக்கெட் வீரர்கள் இதுவரை சிறைக்குச் சென்றவர்கள் பட்டியலை வைத்து இதில் சிறந்த ஆல் டைம் பிளேயிங் லெவன் லிஸ்ட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

பல கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டம், அரசியல், பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று இருக்கிறார்கள். அப்படி சிறைக்கு சென்ற வீரர்களை வைத்து பிளேயிங் லெவன் பட்டியலை தற்போது பார்க்கலாம். இதில் தொடக்க வீரராக பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் இருக்கிறார்.ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கி சிறைக்கு சல்மான் பட் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் நவஜீத் சிங் சித்துவும் தொடக்க வீரராக உள்ளார். மூன்றாவது வீரராக இலங்கையைச் சேர்ந்த குணதிலகா இருக்கிறார். இவரும் பாலியல் புகாரில் சிக்கி சிறைக்கு சென்றவர். இதைப் போன்று நான்காவது வீரராக சூதாட்டப் புகார் சிக்கிய பாகிஸ்தான் வீரர் இஜாஸ் அகமது இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் இருக்கிறார்.
ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் அடிதடி சண்டை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாவது இடத்தில் பாகிஸ்தான் ஜாம்பவான் இம்ரான் கான் உள்ளார். இம்ரான் கான் அரசியலுக்கு சென்று அந்நாட்டின் பிரதமராக உயர்ந்திருந்தார். எனினும் இம்ரான் கான் மீது பல வழக்குகள் போடப்பட்டு சிறையில் இருக்கிறார்.
இந்த அணிக்கு அவர்தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டாவது இடத்தில் மற்றொரு பாகிஸ்தான் வீரரும் ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய முகமது அமீர் இருக்கிறார். ஒன்பதாவது இடத்தில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் இருக்கிறார். ஸ்ரீசாந்த்தும் பிக்சிங் வழக்கில் சிக்கி 28 நாட்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆசிப் இருக்கிறார். தற்போது பதினோராவது இடத்தில் நேபால் வீரர் சந்திப் லமிச்சேன் இருக்கிறார். இவர் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.