சர்வதேச ஒருநாள் 3வது போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 தொடரை 5க்கு 5 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்ததாக விளையாடிவரும் சர்வதேச ஒருநாள் போட்டி தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. இந்நிலையில் மவுண்ட் மாங்கானுய்யில் நாளை நடைபெறவுள்ள 3வது மற்றும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. மேலும் இரு அணிகளும் வெற்றிபெற தீவிரம் காட்டி வருகின்றன.
விராட் கோலி குறித்து கருத்து
3வது போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அந்த அணியின் தற்காலிக கேப்டன் டிம் சவுதி, விராட் கோலி, சர்வதேச ஒருநாள் தொடர் வெற்றி உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். டி20 தொடரில் தோல்வியடைந்தாலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து சிறப்பாக விளையாடி வருவதாகவும், கடந்த உலக கோப்பையிலும் இறுதிப்போட்டி வரை சென்றதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். இதனால் தற்போதைய தொடர் வெற்றி ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விராட் குறித்து பாராட்டு
இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த வீரர் என்றும் சிறப்பாக விளையாடி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ள டிம் சவுதி, குறிப்பாக ரன் சேஸிங்குகளில் அவர் வலிமையாக விளங்குவதாக தெரிவித்துள்ளார். அவரை அவுட்டாக்குவது உற்சாகத்தை அளிப்பதாகவும் சவுதிகுறிப்பிட்டுள்ளார். சர்வதேச போட்டிகளின் அனைத்து வடிவங்களிலும் இதுவரை 9 முறை விராட் கோலியை டிம் சவுதி அவுட்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான விளையாட்டு
கேன் வில்லியம்சன் உள்ளிட்ட அணியின் முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலையிலும், நியூசிலாந்து அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதை அவர் பெருமிதத்துடன் சுட்டிக் காட்டினார். உலக கோப்பை போட்டிகளுக்கு அடுத்ததாக தற்போதுதான் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த அவர், ஆயினும் அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக கூறினார்.
வலிமையாகியுள்ள அணி
இந்தியாவிற்கு எதிரான கடந்த 2வது சர்வதேச ஒருநாள் போட்டியில் வயிற்று வலியுடன் அணியை வழிநடத்திய டிம் சவுதி, தற்போது குணமடைந்துள்ளார். இந்நிலையில் கேன் வில்லியம்சன், இந்த மூன்றாவது போட்டியில் சேரவுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அணி மேலும் வலிமையாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டிம் சவுதி பாராட்டு
நியூசிலாந்து அணியில் புதிதாக களமிறங்கியுள்ள கைல் ஜாமிசன் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். இதற்கும் டிம் சவுதி பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல ஒவ்வொரு போட்டியின்போதும் மாறும் ஆடுகளங்களை கவனத்தில் கொண்டு விளையாடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு சவாலான விஷயம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்திடம் தொடர் தோல்வி
கடந்த ஒரு ஆண்டாக சர்வதேச அளவில் எந்த ஒரு தொடரையும் இழக்காத இந்தியா, தற்போது இந்த தொடரை நியூசிலாந்திடம் இழந்துள்ளது. இதேபோல கடந்த 2014ல் நியூசிலாந்திடம் தொடரை இழந்த இந்தியா, தற்போதுதான் தொடரை பறிகொடுத்துள்ளது. இதையடுத்து நாளை நடைபெறவுள்ள 3வது போட்டியிலும் தொடர்ந்து வரும் 21ம் தேதி முதல் ஆடவுள்ள டெஸ்ட் தொடரிலும் வெற்றிபெற நியூசிலாந்து கடுமையாக முயற்சிக்கும் என்றும் டிம் சவுதி கூறியுள்ளார்.