இயான் போதம், இம்ரான்கான், ரிச்சர்ட் ஹாட்லி மூணு பேரைவிட நான் சிறந்தவன்... கபில் தேவ்
சென்னை : ஆல்-ரவுண்டர்கள் இயான் போதம், இம்ரான் கான், ரிச்சர்ட் ஹாட்லி மூவரையும் சேர்த்து வைத்து பார்த்தாலும் தான் சிறப்பான ஆல்ரவுண்டராக திகழ்ந்ததாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் துவக்க ஆட்டக்காரர் டபள்யூ.வி ராமனின் 'இன்சைட் அவுட்' நிகழ்ச்சியில் பேசிய கபில்தேவ் கிரிக்கெட் குறித்த பல்வேறு சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
மேலும் சென்னையில் வெயில் அதிகமாக இருந்தபோதிலும், சேப்பாக்கம் மைதானத்தில் தான் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் சிறப்பாகவே விளையாடியுள்ளதாக தெரிவித்தார்.

இளம் வீரர்களுக்கு உத்வேகம்
முன்னாள் கேப்டன் கபில்தேவ் தான் ஆடிய காலத்தில் சிறப்பான ஆட்டக்காரராகவும், சிறந்த கேப்டனாகவும் திகழ்ந்தவர். தன்னுடைய கேப்டன்ஷிப்பில் இந்திய அணியை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றவர். பல இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருப்பவர். இந்தியாவின் உலக கோப்பை கனவை நனவாக்கித் தந்தவர்.

ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்கள்
கடந்த 1983 உலக கோப்பை தொடரில் இவர் அடித்த 175 ரன்கள் சாதனை தற்போதுவரை ரசிகர்களால் உச்சி முகரப்படுகிறது. இந்நிலையில் டபள்யூ.வி ராமனின் 'இன்சைட் அவுட்' நிகழ்ச்சியில் பேசிய கபில்தேவ் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா போன்ற அணிகளை வீழ்ந்திய இந்திய அணிக்கு ஜிம்பாப்வேவை வீழ்த்துவது கடினமாக இருந்ததாகவும், தான் அடித்த 175 மற்றும் கிர்மானி அடித்த 100 ரன்களே வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ளார். இறுதி 7 ஓவர்களில் தாங்கள் இதை சாத்தியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூவரைவிட தான் சிறப்பு
எதிரணி வீரர்களும் ஆல்-ரவுண்டர்களுமான இயான் போதம், சர் ரிச்சர்ட் ஹாட்லி மற்றும் இம்ரான்கான் போன்றவர்களை சேர்த்து கணக்கிட்டாலும் அவர்களைவிட தான் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் கபில்தேவ். இம்ரான்கான் கடுமையாக உழைப்பவர் மற்றும் ஹாட்லி மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திறமை வெளிப்படும் இடம்
சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவதில் கபில்தேவிற்கு எப்போதுமே ஒரு பிரியம் உண்டு. அது முதல்தர போட்டியாக இருந்தாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான திறமை வெளிப்படும் இடமாக சேப்பாக்கம் மைதானம் காணப்பட்டதாக கபில்தேவ் கூறியுள்ளார். சென்னையில் வெயில் அதிகமாக காணப்பட்டாலும் தன்னுடைய ஆட்டம் எப்போதுமே சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications