சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே இந்த ஆண்டுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள பிரச்சனைகள் என்ன, அடுத்த ஆண்டு அந்த அணி எப்படி மாறப்போகிறது என்பது பற்றிப் பேசினார்.
"இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக மோசமான நிலை என்பது எனக்குத் தெரியும். அதே சமயம் இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல படிப்பினையாக அமையும். வெற்றிகளின் மேல் நீங்கள் ஓய்வெடுத்தால், எதிர்காலத்தைப் பற்றி கவனிக்காமல் இருந்தால், இதுதான் நடக்கும். இங்கிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் விழிப்புணர்வோடு முன்னேறிச் செல்லும்" என்று அம்பத்தி ராயுடு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தோனியும் ஐபிஎல் ஆட்டங்கள் முன்னேறிச் சென்று விட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அடுத்த ஆண்டுக்கான அணியை கட்டமைப்பதை பற்றி இப்போதே யோசித்துக் கொண்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் லைன் அப்பில் டேவால்டு பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே போன்ற சில சிறந்த வீரர்களை நாம் இப்போது பார்க்கிறோம். சில சமயம் ஒரு அணியை உருவாக்க ஒரு சீசன் முழுமையும் தேவைப்படும். ஏனெனில் இந்த ஆட்டம் நம்மை விட மிகவும் பெரியது. உங்களின் அடிப்படையை நீங்கள் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு அடக்கத்துடன் இருக்க வேண்டும்" என்றார்.
"சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களிடம் ஷாட் தேர்வில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் போதிய அளவு ஷாட்களை ஆடவே இல்லை. சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் தேவைப்படுவதை விட அதிக நேரங்களை எடுத்துக் கொள்கின்றனர். அணியில் நிறைய பேரை மாற்ற வேண்டும். இப்போது நாம் பரிசோதனை முயற்சியில் பலரையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது அடுத்த ஆண்டு தொடருக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு இருக்கும் வீரர்களில் பலரையும் அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். 7 அல்லது 8 வீரர்கள் தான் தக்க வைக்கப்படுவார்கள்" இவ்வாறு அம்பத்தி ராயுடு கூறினார்.