ஜமைக்கா: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் முதல்முறையாக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு படைத்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் நட்சத்திர வீரர் அம்பாதி ராயுடு ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதன் காரணமாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்ற பின் கோப்பையை வாங்கும் போது, கேப்டன் தோனி தன்னுடன் ராயுடுவையும் அழைத்து சென்றார். இதன்பின் அம்பாதி ராயுடு அரசியலில் களமிறங்கும் திட்டத்தில் இருந்தார். இந்த நிலையில் ராயுடு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ளார்.

பிரவீன் தாம்பேவுக்கு பின் கரீபியன் லீக் தொடரில் விளையாடும் இந்திய வீரர் என்ற பெயரை அம்பாதி ராயுடு பெற்றுள்ளார். கரீபியன் லீக் தொடரில் செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டியில் களமிறங்கிய ராயுடு, ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
இதன்பின் குயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இதில் முதலில் பேட்டிங் செய்த குயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 32 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த செண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அப்போது களமிறங்கிய அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாடி 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 24 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அம்பாதி ராயுடு படைத்துள்ளார். இதன் மூலம் சிபிஎல் தொடரை காண்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
அதேபோல் சிபிஎல் மட்டுமல்லாமல் அம்பாதி ராயுடு அடுத்ததாக தொடங்கவுள்ள எஸ்ஏ20 லீக், ஐஎல்டி20 லீக் மற்றும் எம்எல்சி உள்ளிட்ட லீக்களிலும் விளையாடவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளின் பங்காளிக்காக ராயுடு களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.