ஹைதராபாத்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் போர் பதற்றம் குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அவர் ஜோக்கர் அல்ல துரோகி என சிலர் அவரை விமர்சித்து உள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீரில் 26 பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்திய நிலையில், இந்தியா அதற்கு எதிர்வினை ஆற்றி வருகிறது. அதனால் இருதரப்புகளும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் சம்பவங்களும், எல்லை மீறிய தாக்குதலும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அம்பத்தி ராயுடு வெளியிட்டு இருக்கும் பதிவில், "ஒரு கண்ணுக்கு மற்றொரு கண்ணை எடுக்க வேண்டும் என்று நினைத்தால், உலகம் இருட்டாகி விடும்" என மகாத்மா காந்தி தெரிவித்த கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். இந்தப் பதிவு நெட்டிசன்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அம்பத்தி ராயுடுவை வறுத்து எடுத்து வருகின்றனர்.
இதற்கு முன் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், அம்பத்தி ராயுடு செய்யும் கிரிக்கெட் வர்ணனையைப் பார்த்து அவரை 'ஜோக்கர்' எனக் கூறியிருந்தார். அதை சுட்டிக்காட்டி, அம்பத்தி ராயுடு ஜோக்கர் மட்டுமல்ல 'துரோகி' எனவும் சிலர் தற்போது விமர்சனம் செய்து உள்ளனர். அம்பத்தி ராயுடு இப்படி பேசிக் கொண்டிருந்தால், சிஎஸ்கே ரசிகர்களும் அவருக்கு ஆதரவாகப் பேச மாட்டார்கள் என விராட் கோலி ரசிகர் ஒருவர் கூறியிருக்கிறார்.
'ஒரு கண்ணுக்கு மற்றொரு கண் என சென்றால், உலகம் இருட்டாகிவிடும்' என அம்பத்தி ராயுடு கூறி இருக்கும் நிலையில், "இதற்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது: இரண்டு கண்களையும் நாம் இழந்து விடலாம். உங்களுக்குப் பதிலாக உலகக் கோப்பையில் வேறு ஒருவர் விளையாடியதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நீங்கள் மட்டும் தான் இதை ஆதரிக்க முடியும்" என ஒரு ரசிகர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
"இதை நீங்கள் சீரியஸாகச் சொல்கிறீர்களா? இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என பத்திரிகையாளர்கள் சிலரும் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மற்றொருவரோ, "நீங்கள் அந்த 3டி கண்ணாடியை போட்டுக் கொண்டு இந்தப் பதிவை செய்திருக்கலாம்" என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
வீரேந்தர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத்,ஷிகர் தவான் உள்ளிட்ட மற்ற கிரிக்கெட் வீரர்களும் இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக வெளியிட்டு உள்ளனர். சேவாக் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் பாகிஸ்தானைக் கண்டித்தும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். ஆனால் அம்பத்தி ராயுடு சர்ச்சைக்குரிய வகையில் பதிவை வெளியிட்டு எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்.