மும்பை: வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் பங்கேற்பதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் இருந்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு விலகியுள்ளார்.
அண்மையில் நடந்து முடிவடைந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் அதிரடி வீரர் அம்பாதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து சென்னை அணியின் உரிமையாளரான ரூபா குருநாத் உடன் இணைந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார். இதனால் அம்பாதி ராயுடு ஆந்திர அரசியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக ராயுடுவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நிச்சயம் ஆந்திர அரசியலுக்கு வருவேன். எந்தக் கட்சியில் இணைவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.

இதனால் ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக ரசிகர்களிடையே பார்க்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. அங்கு விரைவில் தொடங்கவுள்ள டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை வாங்கியது. இந்த அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் காரணமாக மேஜர் லீக் தொடரில் விளையாடுவதற்காகவே ராயுடு ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்ததாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பிசிசிஐ ஆய்வுக் கூட்டம் செயலாளர் ஜெய் ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் சிலர் முன்கூட்டியே ஓய்வை அறிவிக்கும் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் வெளிநாடுகளில் நடக்கும் லீக்குகளில் பங்கேற்க சரியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் இந்திய வீரர்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்ற பின், "கூலிங் ஆஃப்" காலம் என்ற திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. கூலிங் ஆஃப் காலம் என்பது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்பாக சில காலம் கிரிக்கெட் தொடர்பாக நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதன்பின்னர் வெளிநாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் பங்கேற்க முடியும் என்று விதிகளை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முறையாக கொள்கைகள் வகுக்கப்பட்டு, விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதனால் அம்பாதி ராயுடு அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பில், மேஜர் லீக் தொடரின் முதல் சீசனில் இருந்து அம்பாதி ராயுடு சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதனால் இம்முறை டெக்ஸாஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.