அம்பதி ராயுடு, கலீல் அஹ்மது.. இந்த 2 பேரையும் உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுக்குங்க
திருவனந்தபுரம் : இந்திய ஒருநாள் அணியில் சில குறைகள் இருந்தன. அந்த குறைகளை போக்கும் வகையில் அம்பதி ராயுடு மற்றும் கலீல் அஹ்மது செயல்பட்டு இந்திய அணியில் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் ராயுடுவும், பந்துவீச்சில் கலீலும் சிறப்பாக செயல்பட்டனர்.
இவர்கள் இருவரையும் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி உள்ளனர்.

இந்திய அணியின் சிக்கல்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா நீண்ட கிரிக்கெட் தொடரில் ஆடுவது வீண் வேலை என பலர் முதலில் கூறி வந்தனர். எனினும், இந்த தொடரில் முக்கிய நன்மையாக இந்தியாவிற்கு பிரச்சனையாக இருந்த நான்காவது பேட்ஸ்மேன் மற்றும் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடத்திற்கு சரியான வீரர்கள் கிடைத்துள்ளனர்.

நான்காவது இடத்திற்கு யார்?
இந்திய பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் யாரை பேட்டிங் ஆட வைக்கலாம் என்ற குழப்பம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த இடத்தில், தோனி, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் என பலரையும் முயற்சி செய்து பார்த்ததில், யாரும் சரியாக செயல்படவில்லை. தினேஷ் கார்த்திக் ஓரளவு ரன் எடுத்தாலும், அவரால் சில போட்டிகளில் வேகமாக ரன் குவிக்க முடியவில்லை.

அம்பதி ராயுடு அபாரம்
அதையடுத்து, நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பிய அம்பதி ராயுடு ஆசிய கோப்பையில் கோலியின் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்து தன் திறனை நிரூபித்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலியின் வரவை அடுத்து, அம்பதி ராயுடு நான்காம் இடத்தில் பேட்டிங் செய்தார். சிறப்பாக பேட்டிங் செய்த அம்பதி ராயுடு நான்கு இன்னிங்க்ஸ்களில் 217 ரன்கள் எடுத்தார். இதன் சராசரி 72.33 ஆகும். ஒரு சதம், ஒரு அரைசதமும் இதில் அடங்கும். இதன் மூலம் ராயுடு இந்திய அணியில் நான்காம் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார்.

கலீல் அஹ்மது 7 விக்கெட்கள்
கலீல் அஹ்மது ஆசிய கோப்பையில் அறிமுகம் ஆனார். அதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடிய கலீல் அஹ்மது நான்கு போட்டிகளில் பந்துவீசி ஏழு விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் தவிர்த்து மூன்றாவதாக திறன் வாய்ந்த பந்துவீச்சாளர் இல்லாமல் இருந்த நிலை முன்பு இருந்தது. கலீலின் வருகையை அடுத்து அந்த பிரச்சனை தீரும் என கோலி, ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அம்பதி ராயுடு மற்றும் கலீல் அஹ்மது இருவரும் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications