மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்த நிலையில், அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரில் ஜேகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக விளையாடி ஏராளமான கோப்பைகளை வெல்ல காரணமாக அமைந்தவர் அம்பாதி ராயுடு. மும்பை அணியால் கழற்றிவிடப்பட்ட போது, சென்னை அணியாலும், தமிழக மக்களாலும் வாரி அணைத்துக் கொள்ளப்பட்டவர் அம்பாதி ராயுடு. அதற்கேற்ப களத்தில் சரவெடியாய் வெடித்து எதிரணியை சிதறடிப்பார் என்ற சொல்லலாம். ஸ்பின், வேகம் என்று எல்லா பந்துகளையும் ஒரே போல் விளாசக் கூடிய சில வீரர்கள் ராயுடுவும் ஒருவர்.

இவர் கடந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற போது, கேப்டன் தோனி இவரையும் உடன் அழைத்து சென்று கோப்பையை இவரின் கைகளால் பெற்றுக் கொண்டார். இதனால் நெகிழ்ந்துபோன அம்பாதி ராயுடு, களத்தில் இருந்து ஆனந்த கண்ணீருடன் விடைபெற்றார். இதன் பின் அரசியல் களமிறங்கப் போவதாக அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் தொடங்கிய எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பிசிசிஐ தரப்பில் ஓய்வை அறிவித்த வீரர்களுக்கு, ஒரு ஆண்டு எந்த வெளிநாட்டு கிரிக்கெட் லீக் தொடர்களிலும் பங்கேற்க அனுமதியில்லை என்று புதிய விதிமுறையை கொண்டு வந்தது. இதனால் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அம்பாதி ராயுடுவால் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில் அம்பாதி ராயுடு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க உள்ளதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. சிபிஎல் தொடரின் செண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பாட்ரியட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. இருப்பினும் பிசிசிஐ அனுமதி அளிக்கிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் சிபிஎல் தொடரை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வரும் எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த லீக்கில் பங்கேற்றுள்ள சிஎஸ்கே அணியின் பங்காளியான ஜொகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு களமிறங்க உள்ளார். அவர் மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் களமிறங்குவதால் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் பிசிசிஐ முடிவை பொறுத்தே ராயுடு விளையாடுவாரா என்பது தெரிய வரும்.