ஐதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.ராயுடுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எனினும் அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயுடு சிஎஸ்கே வின் டெக்ஸாஸ் அணியில் விளையாட உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே மற்ற நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட முடியும் என்பதால் ராயுடு இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. ஆனால் இந்த ஓய்வு முடிவுக்கு பிறகு வேறு ஒரு காரணம் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆந்திர அரசியல் களத்தில் அம்பத்தி ராயுடு குதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஐபிஎல் கோப்பையை ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
இதற்கு காரணம் அம்பத்தி ராயுடு மீது ஜெகன்மோகன ரெட்டி நல்ல அபிப்ராயத்தை வைத்திருப்பதாகவும் தங்கள் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் சார்பாக ராயுடு களம் இறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே ஜெகன்மோகன் ரெட்டியை அம்பத்தி ராயுடு ஐபிஎல் கோப்பையுடன் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அல்லது ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் என்று தகவல் வெளியாகவில்லை. மேலும் ராயுடு பொன்னூர் அல்லது குண்டூர் தொகுதிகளிலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் மச்சிலி பட்டணத்தில் இருந்து ராயுடு போட்டி போட வேண்டும் என்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் விரும்புதாகும் கூறப்படுகிறது.
37 வயதான ராயுடு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை மிகவும் பாராட்டி பேசி இருந்தார். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஜெகன்மோகன் ரெட்டி காரணமாக இருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஆந்திர முழுவதும் வளர்ச்சியை முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் பாராட்டினார்.இதனால் ராயுடு அரசியலில் குதிக்கப் போவது உறுதியாகியுள்ளது. எனினும் அரசியலில் களமிறங்கினாலும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியிலும் ராயுடு விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.